அந்த அதிகாரம் நயினார் நாகேந்திரனுக்கு கிடையாது.. காட்டமாக பதிலளித்த அண்ணாமலை.. என்ன நடந்தது?
திருப்பூர்: பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்கு ரெய்டு விடுவதற்கெல்லாம் எந்த அதிகாரமும் கிடையாது என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை காட்டமாக பதில் அளித்துள்ளார். இதனால் நயினார் நாகேந்திரன் மற்றும் அண்ணாமலை இடையில் சுமூக உறவு இல்லையோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பாக பாஜக சட்டமன்றத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்கள் தரப்பில், ரெய்டு நடத்தி அதிமுகவை பாஜக கூட்டணிக்குள் கொண்டு வர நெருக்கடி கொடுக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நயினார் நாகேந்திரன், யார் வீட்டில் பணம் இருக்கிறதோ, அவர்களின் வீட்டில் தான் வருமான வரித்துறை சோதனை நடக்கிறது.

இந்த ரெய்டுக்கும் கூட்டணி வற்புதலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ரெய்டு மூலம் மிரட்டல் விடுத்து அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக தலைவர்கள் பேசினாலே, கூட்டணி அமைந்துவிடும். யாரையும் மிரட்டி பணிய வைக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை என்று தெரிவித்தார்.
இதனால் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைய வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம், நயினார் நாகேந்திரனின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அண்ணாமலை, ரெய்டு விடுவதற்கெல்லாம் நயினார் நாகேந்திரனுக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்று காட்டமாக பதில் அளித்தார்.
தொடர்ந்து பாஜக மாநில தலைவர் தொடர்பான கேள்விக்கு, பாஜகவில் உள்ள அனைவரும் சகோதர சகோதரிகள் தான். வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், தமிழிசை செளந்தரராஜன், ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் என்று அனைவரின் நோக்கமும், பாஜகவை 2026ல் ஆட்சியை அமர்த்த வேண்டும் என்பது தான். அனைத்து தலைவர்களும் ஒருமித்த கருத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம் என்று கூறியுள்ளார்.
பாஜக மாநில தலைவர் நியமனம் இன்னும் சில நாட்களில் நடக்கவுள்ளது. அடுத்த தலைவருக்கான ரேஸில் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, வானதி சீனிவாசன் மற்றும் தமிழிசை செளந்தரராஜன் ஆகிய 4 பேரும் முன்னிலையில் இருப்பதாக பார்க்கப்படுகிறது. அதிலும் நெல்லை தொகுதியில் வலிமையாக தலைவராக பார்க்கப்படும் நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.
முன்னாள் அமைச்சர், பிற கட்சியினருடனான நட்பு, சொந்த தொகுதியில் உள்ள பலம் என்று அடுத்த பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட பல்வேறு சாதகங்கள் அமைந்துள்ளது. இந்த நிலையில் நயினார் நாகேந்திரனை பொதுவெளியிலேயே அண்ணாமலை காட்டமாக விமர்சித்திருப்பதன் மூலமாக, இருவருக்கும் இடையில் சுமூக உறவு இல்லையோ என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications