கியரை மாற்றிய மோடி.. "1989 மார்ச் 25" முதல்.. ஒரு விஷயத்தையும் விடவில்லை.. திமுக மீது கடும் விளாசல்
திருப்பூர்: திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்துவிட்டால் பெண்கள் மேலும் இழிவுபடுத்தப்படுவார்கள் என்று தாராபுரம் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
மேலும், 1989ம் ஆண்டு சட்டசபையில் ஜெயலலிதா அவமரியாதை செய்யப்பட்டார் என்று திமுக வுக்கு எதிராக நேரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் மோடி.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் இன்று, அதிமுக, பாஜக கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார்.

2ஜி கூட்டணி
திமுக, காங்கிரஸ் கூட்டணி வாரிசு திட்டத்தையே முன்வைக்கின்றன. திமுக- காங்கிரஸ் 2 ஜி ஏவுகணையை வீசி இருக்கின்றன. திமுக, காங்கிரஸ் ஏவிய 2 ஜி ஏவுகணை தமிழகப் பெண்களை இழிவுபடுத்துகின்றனர். தமிழக மக்கள் ஒவ்வொன்றையும் உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கின்றனர். பெண்களை அவமதிக்கும் எந்த போக்கையும் தமிழக மக்கள் அனுமதிக்கமாட்டார்கள். திமுக, காங்கிரஸ் கட்சிகள் தலைவர்களை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும்.

பெண்கள் பிரச்சினை
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயாரை இழிவாக பேசி இருக்கின்றனர். கடவுளே! திமுக- காங். ஆட்சிக்கு வந்துவிட்டால் இன்னமும் பெண்களை இழிவுபடுத்துவார்கள். பெண்களை இழிவுபடுத்துவதுதான் திமுக. பெண்களை மிக கேவலமாக பேசியிருக்கிறார் திண்டுக்கல் லியோனி.
திமுகவின் திண்டுக்கல் ஐ லியோனி பெண்கள் பற்றி அருவருக்கத்தக்க வகையில் சில வார்த்தைகளை பேசி இருந்தார். திமுக அவரை தடுக்கவில்லை.

சட்டசபையில் ஜெயலலிதா
திமுக இளவரசர் அந்த கட்சியில் உள்ள மூத்த தலைவர்களை ஓரம் கட்டிவிட்டு நடு நாயகமாக வீற்றிருக்கிறார். அவரும் பெண்களை பற்றிய அருவருப்பாக பேசியுள்ளார். அதையும் திமுக தடுக்கவில்லை. 1989 மார்ச் 25ஆம் தேதி ஜெயலலிதா அவர்களை சட்டசபைக்குள் திமுக உறுப்பினர்கள் எப்படி நடத்தினார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

பெண்களுக்கு எதிரான செயல்பாடு
திமுக மற்றும் காங்கிரஸ் இரண்டு பேரும் பெண்களுக்கு எதிராக எப்போதுமே செயல்படுகிறார்கள். அவர்களது காலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே சென்றன. இங்கு மட்டும் கிடையாது மேற்கு வங்கத்தில் இவர்களது நட்பு கட்சி திரிணாமுல் காங்கிரஸ் தாக்கி, சில நாட்களுக்கு முன்பாக வயதான பெண்மணி உயிரிழந்துள்ளார். அவர் பெயர் சோனா மாலிக். இவர்கள் கூட்டணி என்பது எப்போதுமே பெண்களுக்கு எதிரானதாகவே இருந்து வருகிறது.

பெண்கள் மாண்பை காக்கிறோம்
ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினர், ஆண்டாள் தாயார் மற்றும் புலவர் அவ்வையார் மீது பெரு மதிப்பு வைத்துள்ளோம். பெண்கள் அதிகாரம் பெற வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். பெண்களின் மாண்பை பாதுகாப்பதற்காக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிவறைகளை கட்டிக்கொடுத்தோம். உஜ்வாலா திட்டத்தின் மூலம் 32 லட்சத்துக்கும் மேற்பட்ட வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள ஏழை எளிய மக்கள் தமிழகத்தில் புதிய எரிவாயு இணைப்பு பெற்றுள்ளனர். இவ்வாறு மோடி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications