"மனஅழுத்தம்..!" மாணவர்களின் விபரீத முடிவுகளை தடுக்க புதிய திட்டம்! அன்பில் மகேஷின் புதிய ஐடியா
திருப்பூர்: குழந்தைகளுக்கு மன அழுத்தம் அதிகரிக்கும் நிலையில், அவர்கள் விபரீத முடிவுகள் எடுப்பதைத் தடுப்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்,
Recommended Video
திருப்பூர் மாவட்டத்தில் தமிழக அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் ஜெய்வாய்பாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உலக திறனாய்வு உடற்திறன் தெரிவு போட்டிகளின் தொடக்க விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

அன்பில் மகேஷ்
அப்போது பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், "6,7 மற்றும் 8ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவ- மாணவிகள் படிப்பில் மட்டுமில்லாமல் விளையாட்டு போன்ற மற்ற துறைகளிலும் மாணவர்களிடையே இருக்கும் திறமைகளை வெளியில் கொண்டு வரவே இது போன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன. விளையாட்டுப் போட்டிகளில் தான் உடல் ரீதியாகவும் , மன ரீதியாகவும் நாம் பலமடைய முடியும்.

விளையாட்டுப் போட்டிகள்
மாணவர்கள் பலமடைந்தால் சமூகத்திற்கு நல்லது. மேலும், விளையாட்டில் அதிகம் ஈடுபடும்போது, நாம் சுறுசுறுப்பு அடைகிறோம். இதன் மூலம் படிப்பிலும் நம்மால் அதிக கவனம் செலுத்த முடியும். உலக திறனாய்வு உடற்திறன் தெரிவு போட்டிக்கான செயலி இன்று ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த செயலியைப் பயன்படுத்தி, மாணாக்கர்களின் திறனைக் கண்காணிக்க முடியும். இதன் மூலம் தேர்வு செய்யப்படும் மாணவர்களின், விளையாட்டு பயிற்சிக்கான செலவைப் பள்ளிக்கல்வித் துறையே ஏற்கும் திட்டமும் உள்ளது" என்றார்.

ஆலோசனை
அதைத் தொடர்ந்து திருப்பூர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விழிப்புணர்வு ஜோதி நிகழ்வை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார் அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ், "மாணவ மாணவிகளின் நலனை மேம்படுத்த அரசின் திட்டங்களை எப்படி வெற்றிகரமாகச் செயல்படுத்துவது என்பது குறித்து பள்ளிக் கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம்.

தன்னம்பிக்கை
மன அழுத்தத்தின் காரணமாக மாணவர்கள் விபரீதமான முடிவை எடுக்கிறார்கள். அவர்களை இதுபோன்ற விளையாட்டுத் துறைகளில் கவனத்தைச் செலுத்த வைப்பதன் மூலம் அவர்களுக்கு புதிய தன்னம்பிக்கையை ஏற்படுத்த முடியும்" என்று தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி நிகழ்வு
கள்ளக்குறிச்சி நிகழ்விற்குப் பின் பள்ளி வளாகத்தில் குழந்தைகளுக்கு நடக்கும் சம்பவங்களுக்கு நிர்வாகம் பொறுப்பில்லை எனக் கட்டாயப்படுத்திப் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் எழுதி வாங்கப்படுவதாகச் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர், "நடக்கக் கூடாத சோக நிகழ்வு கள்ளக்குறிச்சியில் நடந்துள்ளது. குழந்தைகள் முழுமையாகத் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். யாரும் எளிதாக இதிலிருந்து தப்பிவிட முடியாது. ஒவ்வொரு ஒன்றியத்திலும் 2 மருத்துவர்கள் என நியமிக்கப்பட்டு மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளது" என்றார்












Click it and Unblock the Notifications