"நீங்க எப்படி ஆர்டர் போடலாம்".. மாட்டிறைச்சி தடை.. வட்டாட்சியர் சுப்பிரமணி தூக்கியடிப்பு.. அதிரடி!
திருப்பூர்: திருப்பூர் அருகே மாட்டிறைச்சி விற்கக் கூடாது என வியாபாரியை மிரட்டிய வட்டாட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வட்டாட்சியர் சுப்பிரமணி மாட்டிறைச்சி விற்பனையை தடை செய்ய முயன்றது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவிநாசி அருகே இருக்கும் கானங்குளம் கிராமத்தில் வேலுசாமி என்ற மாட்டிறைச்சி கடை உரிமையாளர் வீட்டில் வட்டாட்சியர் சுப்பிரமணி நேற்று ஆய்வு செய்தார்.
அவரின் வீட்டில் இருக்கும் மாடுகள் குறித்தும், மற்ற ஆடு, மாடு கோழிகள் குறித்தும் வட்டாச்சியர் சுப்பிரமணி ஆய்வு செய்தார்.

கூடாது
அப்போது வேலுசாமியை எச்சரித்த வட்டாட்சியர் சுப்பிரமணி, நீங்க ஆடு மாடு வேண்டுமானால் விற்கலாம். தப்பில்லை. ஆனால் மாட்டிறைச்சியை விற்க கூடாது. மாட்டிறைச்சி விற்பதை நிறுத்திக்கொள்ளுங்கள் என்று உத்தரவிட்டார். இதையடுத்து வேலுசாமி வட்டாச்சியர் சுப்பிரமணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

விதி
மாட்டிறைச்சியை விற்க கூடாது என்று எதுவும் விதி இருக்கிறதா? யார் இப்படி ஆர்டர் போட்டது என்று வேலுசாமி கேட்டார். வட்டாட்சியர் சுப்பிரமணி இப்படி மாட்டிறைச்சிக்கு தடை போடும் வீடியோ இணையம் முழுக்க பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் வட்டாட்சியர் சுப்பிரமணி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் தெரிவித்து இருந்தார்.

நடவடிக்கை
இந்த நிலையில் வட்டாட்சியர் சுப்பிரமணி தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவிநாசி வட்டாட்சியர் பொறுப்பில் இருந்து சுப்பிரமணி நீக்கப்பட்டு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாட்டிறைச்சியை சுத்தமாக வெட்டுவது இல்லை என்று புகார் வந்தது. இதனால்தான் நடவடிக்கை எடுத்தேன் என்று வட்டாட்சியர் சுப்பிரமணி குறிப்பிட்டார்.இவர் ஊத்துக்குளியில் கூடுதல் ஆய்வாளாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆனால்
ஆனால் இவரின் விளக்கத்தை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்த பணியிட மாற்றம் முதல் கட்ட நடவடிக்கை என்று கூறப்பட்டுள்ளது. துறை ரீதியாக விசாரணை நடைபெற்று வருகிறது. இது முடிந்ததும் சுப்பிரமணி மொத்தமாக பணியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications