குரூப் 4 தேர்வு.. இயேசு கிறிஸ்துவின் வருகை.. இதைகூட விடாத திமுகவின் ஓட்டுவங்கி அரசியல்! யார் பாருங்க
திருப்பூர்: தமிழகத்தில் நடந்த குரூப்-4 தேர்வு குறித்த பரபரப்பு இன்னமும் அடங்கவில்லை.. திமுக அரசுக்கு இந்து முன்னணி கேள்வி ஒன்றை எழுப்பியிருக்கிறது.
டிஎன்பிஎஸ்சி என்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், வருடந்தோறும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.. இதற்காக டிஎன்பிஎஸ்சியில் குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல்வேறு பணிகளுக்கு தேர்வுகளும் ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படியே, இந்த வருடமும் 6,244 காலி பணியிடங்களுக்கான தேர்வு 2 நாட்களுக்கு முன்பு நடந்தது.. இதில், 20 லட்சம் பேர் வரை எழுதினார்கள்.. இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வில் கிராம நிர்வாக அலுவலர்- 108, இளநிலை உதவியாளர்-2,604, தட்டச்சர்- 1,705, சுருக்கெழுத்து தட்டச்சர் 445, தனி உதவியாளர், கிளார்க் 3 போன்ற பணிகளுக்கான தேர்வு நடத்தப்பட்டது.
இணையவாசிகள்: எப்போதும் போல இல்லாமல், இந்த முறை டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கப்பட்ட சில கேள்விகள் இணையத்தில் வெளியாகி, பொதுமக்களின் கவனத்தை திருப்பி வருகிறது. குறிப்பாக, உறவுமுறைகள் தொடர்பான கேள்வி ஒன்று பெரிய அளவில் டிரெண்டானது..
ரமீலா சொல்கிறார், "எனது மாமனாரான ராமநாதனின் ஒரே மகனான ராமன் ராகவியின் தந்தை".. ரமணி, ராகவியின் சகோதரி என்றால் ரமணி ராமநாதனுக்கு என்ன உறவு? என்பதே அந்த கேள்வியாகும். இதற்கு மனைவி, சகோதரி, மகள், பேத்தி மற்றும் விடை தெரியவில்லை என்று 5 ஆப்ஷன்கள் தரப்பட்டிருந்தது. இந்த கேள்விக்கு இணையவாசிகள் ஆளுக்கொரு பதிலை சொல்லி சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.
சர்ச்சைகள்: சுவாரஸ்யங்கள் ஒருபக்கம் என்றால், சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளது டிஎன்பிஎஸ்சியில் கேட்கப்பட்ட ஒன்று.. தமிழகத்தில் நடந்த இந்த குரூப்-4 தேர்வில் மதம் தொடர்பாகவும் கேள்வி ஒன்று இடம்பெற்றிருக்கிறது. இதற்கு இந்து முன்னணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில் உள்ளதாவது :
"கடந்த 9ம் தேதி குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வை தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தியது. வினாத்தாளில் முதல் கேள்வியே, 'இயேசு கிறிஸ்துவின் வருகையை அறிவித்த முன்னோடி யார்?' என்று கேட்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துவர்கள்: இவ்வினாவுக்கு, கிறிஸ்துவர்கள் மட்டுமே சரியான விடையை தேர்வு செய்திருப்பர். இதனால், ஹிந்து இளைஞர்கள் வேலை வாய்ப்பை பறிக்கும் நோக்கத்தில், வினாத்தாள் வடிவமைக்கப்பட்டு உள்ளதோ என எண்ணத் தோன்றுகிறது.
இந்த வினா, தமிழ் மொழி பகுதியில் இருந்து கேட்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி சார்ந்த ஆயிரமாயிரம் பண்டைய நுால்கள் தமிழ் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் உள்ளன. அவற்றை பாடத்திட்டத்தில் இருந்து புறந்தள்ளி, கிறிஸ்துவ மதம் சார்ந்த பாடங்கள் மற்றும் திராவிட புரட்டுக்கள் பாடங்களாக சேர்க்கப்பட்டு, வரலாற்றை அழிக்கும் வேலையை தமிழக அரசு செய்து வருகிறது.
திமுக அரசு: அரசு பணியாளர் தேர்வுக்கான போட்டி தேர்வில், இயேசு கிறிஸ்துவின் வருகை என்று கேள்வி எழுப்புவதும் கடும் கண்டனத்துக்குரியது. எனவே, திமுகவின் அரசு சிறுபான்மை ஓட்டு வங்கி அரசியலுக்காக, தமிழர்களின் அடையாளத்தை, பண்பாட்டை அழிக்கும் விதமாக செயல்பட கூடாது. மதமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் வினாத்தாள் தயாரிக்க கூடாது. நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்த வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications