விடிய விடிய நின்றபடி.. அசராமல் மீட்பு படையினரை தட்டிகொடுத்து முடுக்கி விட்ட அமைச்சர்கள்! #SaveSujith
குழந்தையை மீட்க தமிழக அமைச்சர்கள் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளனர்
Recommended Video
மணப்பாறை: விடிய விடிய நின்னுட்டு இருந்தாங்க தமிழக அமைச்சர்கள்.. குழந்தை சுஜித்தை பத்திரமாக மீட்கும் பணியில் இவர்கள் இப்போது காட்டி வரும் ஆதங்கமும், ஆர்வமும், அக்கறையும், பாராட்டத்தக்கதாகவே உள்ளது.
மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில்,வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2வயது குழந்தை சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் நேற்று மாலை 5.40 மணிக்கு தவறி விழுந்துவிட்டான்.

இதனை அறிந்த பெற்றோர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கவும், 15 மணி நேரம் கடந்தும் மீட்பு பணி நடந்து வருகிறது.
நேற்று மாலை குழந்தை போர்வெல்லில் விழுந்துவிட்டான் என்ற தகவல் அறிந்ததுமே மீட்கும் பணி நடைபெறும் இடத்துக்கு அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வளர்மதி உள்ளிட்டோர் விரைந்து வந்துவிட்டனர். மாவட்ட கலெக்டர், மாவட்ட எஸ்பி, மணப்பாறை எம்எல்ஏ சந்திரசேகர் மற்றும் அதிகாரிகள் குவிந்தனர்.
குழந்தையை எப்படி எடுக்கலாம் என்று மீட்பு படையினருடன் ஆலோசித்தவாறே அமைச்சர்கள் இருந்தனர். அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும், பக்கத்தில் இருந்தே இப்போது வரை கவனித்து கொண்டு வருகிறார்கள்.
"குழந்தை அசைகிறான்.. குழந்தை அவன் அம்மாவுக்கு பதில் சொல்கிறான்.. குழந்தைக்கு ஆக்சிஜன் போய் கொண்டிருக்கிறது" என்று அங்கு நடக்கும் விஷயங்களை ஒவ்வொன்றாக சொல்லி கொண்டிருந்தனர். இப்போதுகூட, "விடிகாலை குழந்தையிடம் இருந்து சத்தமே இல்லை.. எங்களுக்கு ரொம்பவும் கவலையா இருக்கு.. இருந்தாலும் பத்திரமாக மீட்க போராடி வருகிறோம்" என்ற நம்பிக்கை வார்த்தைகளையும் வெளிப்படுத்தி கொண்டே இருக்கிறார்கள்.
குழந்தையை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என்பதாலேயே விடிய விடிய அமைச்சர்கள் அங்கேயே முகாமிட்டு பணிகளை முடக்கி விட்டுள்ளது பாராட்டத்தக்கதே.. மேலும் சுஜித்தை மீட்க தமிழக அரசு சார்பில் எல்லா உதவிகளையும் செய்து தந்து வருவதுடன், தேவையான உபகரணங்களுடன் மருத்துவக் குழு அங்கேயே தயார் நிலையில் இருப்பதும் அவசியமானதே!
குழந்தையை அமைச்சர்கள், அதிகாரிகள், போலீஸார், கலெக்டர், மீட்புக் குழுவினர் என அரசு சார்பில் பல்வேறுவிதமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் தமிழகம் கவனிக்காமல் இல்லை.. ஆனால் எல்லார் எண்ணமும் குழந்தையை நல்லபடியா வெளியே கொண்டு வந்துவிடவேண்டும் என்பதுதான்!












Click it and Unblock the Notifications