சட்ட விரோத மது விற்பனை.. புகார் அளித்த மாற்றுத்திறனாளி மீது கொடூர தாக்குதல்! 2 போலீசார் சஸ்பெண்ட்
திருச்சி: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் மாற்றுத்திறனாளியைத் தாக்கிய 3 காவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி விராலிமலை அடுத்துள்ள கவரப்பட்டி பகவான்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகன் சங்கர். 29 வயதாகும் இவர் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆவர்.
கவரப்பட்டி பகுதியில் நடைபெற்று வரும் சட்ட விரோத மது விற்பனை குறித்து புகார் அளித்த இவரை அப்பகுதியில் உள்ள போலீார் தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாற்றுத்திறனாளி
திருச்சி கவரப்பட்டி பகுதியில் கள்ளச் சந்தையில் மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் இதனால் அப்பகுதியில் வசிக்கும் மாணவர்கள், பெண்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு, மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்திற்கு சங்கர் கைப்பேசி மூலம் தகவல் அளித்துள்ளார். இதையடுத்து எஸ்பி அலுவலகத்தினர், விராலிமலை காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்ட இந்த விவகாரங்களைத் தெரிவித்து, சங்கரின் கைப்பேசி எண்ணையும் கொடுத்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளனர்.

தாக்குதல்
இப்போது காவலர் ஒருவர் சங்கரை தொடர்பு கொண்டு விவரம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த காவலர்கள் செந்தில் மற்றும் காவலர் பிரபு, அசோக் ஆகியோர் சங்கரை நேரில் சென்று சந்தித்து, தாக்கியுள்ளனர். மேலும், அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அருகே இருந்த மரத்தில் சாய்த்து லத்தியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

பலத்த காயம்
இதில் சங்கருக்கு கை, கால், நெஞ்சு பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், ஒரு கட்டத்தில் அவர் மயங்கி உள்ளார். இதனால் பதற்றமடைந்த போலீசார் அவரை வீட்டிற்குப் போகச் சொல்லி அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும், அவரை நடக்க முடியாத அளவுக்குத் தாக்கியதால், அவர் அங்கேயே மயக்கமடைந்துள்ளார். போலீஸ் அழைத்துச் சென்று நீண்ட நேரம் ஆகியதால், அவரது தாயார் போலீஸ் நிலையத்திற்கு சங்கரை தேடி வந்துள்ளார்.

சஸ்பெண்ட்
அப்போது தான் சங்கர் மயங்கிய நிலையில் இருப்பதை அவரது தாயார் கண்டறிந்துள்ளார். இதையடுத்து அங்குள்ளவர்களின் உதவியுடன் சங்கரை அவரது தாயார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பார்வையற்ற மாற்றுத்திறனாளி காவலர்களே தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்குப் பலரும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், மாற்றுத்திறனாளியைத் தாக்கிய 3 காவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications