நள்ளிரவில் பயங்கர சத்தம்.. நடைபாதையில் கார் மோதி கோர விபத்து! திருச்சியில் 3 யாசகர்கள் துடித்து பலி
நடைபாதையில் கார் ஏறிய விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்
திருச்சி: ஸ்ரீரங்கத்தில் சாலையோர நடைபாதையில் படுத்திருந்தவர்கள் மீது காரை ஏறியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் அருகே சாலையோர நடைபாதையில் யாசகர்கள் சிலர் உறக்கிக்கொண்டிருந்துள்ளனர். ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களிடையே யாசகம் பெற்று இவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு தங்கும் இடம் என்பது சாலையோரம் உள்ள நடைபாதைகள்தான். இப்படி கோயிலை சுற்றி ஏராளமான யாசகர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், நேற்றிரவு அம்மா மண்டபம் அருகே பயங்கர சத்தம் கேட்டிருக்கிறது.

இங்கு உறங்கிக்கொண்டிருந்த யாசகர்கள் சத்தம் வந்த இடத்தை நோக்கி சென்று பார்த்தபோதுதான் கோர விபத்து நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது, நள்ளரவு சுமார் 12.30 மணியளவில் அம்மா மண்டபம் சாலையில் சுசுகி எர்டிகா ரக கார் ஒன்று வேகமாக வந்திருக்கிறது. இந்த கார் இதே வேகத்துடன் நடைபாதையின் மீது ஏறியுள்ளது. இதில் நடைப்பாதையில் உறங்கிக்கொண்டிருந்த யாசகர்கள் படுகாயமடைந்துள்ளனர். அக்கம் பக்கத்தினர் உடனடியாக காயமடைந்தவர்களை மீட்டுள்ளனர்.
ஆனால் அவர்கள் மருத்துவமனைக்கு செல்வதற்குள் உயிரிழந்துள்ளனர். இப்படி மொத்தமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டதில் காரை, திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியை சேர்ந்த காந்தி நாராயணன் என்பவர் ஓட்டி வந்தது தெரிய வந்துள்ளது. இவருடன் அதே பகுதியை சேர்ந்த அஸ்வந்த் என்பவரும் பயணித்திருக்கிறார். இவர்கள் இருவரும் மதுபோதையில் இருந்துள்ளனர். இதனையடுத்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதேபோல உயிரிழந்தவர்களின் உடல்கள் திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த விபத்தில் மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து முதற்கட்ட விசாரணை நடைபெற்று வரும் நிலையில் கார் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாக காரை ஓட்டி வந்தவர்கள் கூறியுள்ளனர். இருப்பினும் விபத்து தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட்ட பின்னர்தான் உண்மை நிலவரம் தெரிய வரும். விபத்து தொடர்பாக சாலையில் வைக்கப்பட்டுள்ள காவல்துறையின் சிசிடிவி கேமிரா மற்றும், அருகில் உள்ள கடைகளில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமிராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவது, முன் அனுபவம் அல்லது பயிற்சி இன்றி வாகனம் ஓட்டுவது போன்றவற்றால் விபத்துகள் அதிகம் ஏற்படுகின்றன.
இதை விட சாலை விபத்துகளுக்கு பிரதான காரணம் வேகம்தான். வேகம் அதிகரிக்கையில் விபத்துக்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன. அதேவேளையில் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறைகின்றன. உலகம் முழுவதும் சாலை விபத்துகளில் பலியாகும் 10 பேரில் இந்தியரும் ஒருவர். கடந்த 2021ம் ஆண்டு மட்டும் 4.12 லட்சம் சாலை விபத்துகள் நடந்திருக்கிறது. இதில் 1.53 லட்சத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 3.84 லட்சத்திற்கும் அதிகமானோர் உடல் உறுப்புகளை இழந்துள்ளனர் என்கிறது புள்ளிவிவரம். சாலை விபத்துகளில் அதிகம் உயிர் பலியை ஏற்படுத்துவது hit&run கேஸ்கள்தான். இந்த திருச்சி விபத்தும் இந்த வகையில்தான் சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications