மறுபடியும் பஞ்சாயத்து? அமைச்சர் கே.என்.நேருவின் பேஸ்புக் பக்கத்தில் லால்குடி எம்எல்ஏ தடாலடி பதிவு
திருச்சி: நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேருவின் பேஸ்புக் பக்கத்தில் லால்குடி எம்எல்ஏ சவுந்தரபாண்டியன் மீண்டும் வெளியிட்ட பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த முறை என்ன பதிவிட்டார் என்பதை பார்ப்போம்.
திமுக முதன்மை செயலாளரும் நகர்புற நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி லால்குடி எம்எல்ஏ சவுந்தரபாண்டியன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடிதம் எழுதி இருந்தார. 10 பக்கத்திற்கு குறையாமல் எழுதிய அந்த கடிதத்தில் கேஎன் நேருவால் தான் செயல்பட முடியாத நிலையில் இருப்பதாகவும் அதனால் தனக்கு எம்.எல்.ஏ பதவியே வேண்டாம் என்று தனது ஆதங்கத்தை கொட்டியிருந்தார்.

இதனிடையே திருச்சி மாவட்டம், லால்குடி தொகுதியில் புதிய பேருந்து நிலையம், வட்டாட்சியர் அலுவலகம் , சார் பதிவாளர் அலுவலகம் கட்டிடம் கட்டுவதற்கான இடங்களை அமைச்சர் கே.என்.நேரு கடந்த ஆண்டு அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். அப்போது நடந்த ஆய்வு நிகழ்ச்சிக்கு தொகுதியின் எம்எல்ஏ சவுந்தரபாண்டியனுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று கூறப்பட்டது. அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர் நேரு அவரின் ஆதரவாளர்கள் அனைவரும் எம்.எல்.ஏவை ஓரங்கட்டுவதற்காக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனால் மன உளைச்சலில் இருந்த எம்எல்ஏ சவுந்தர பாண்டியன் , பேஸ்புக் பக்கத்தில் தான் இறந்துவிட்டதாக தானே பதிவிட்டது திருச்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு , லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சவுந்தரபாண்டியனை நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பிறகு சமூக வலைதளத்தில் பதிவிட்ட தனது கருத்தினை எம்எல்ஏ நீக்கினார். அத்துடன் அந்த பஞ்சாயத்து முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் நேற்று காலை திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ரூ.45 லட்சம் மதிப்புள்ள கழிவுநீர் அகற்றும் வாகனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.என்.நேரு, பெரம்பலூர் எம்.பி. அருண்நேரு மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் அழைப்பு இல்லாததால் லால்குடி எம்.எல்.ஏ. சவுந்தரபாண்டியன் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் அமைச்சர் கே.என்.நேரு, தனது பேஸ்புக் பக்கத்தில் லால்குடி நிகழ்ச்சி தொடர்பான புகைப்படங்களை பதிவேற்றம் செய்து அதுகுறித்த விவரங்களை பதிவிட்டு இருந்தார். அந்த பதிவின் 'கமாண்ட்' பகுதியில் சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ. ஒரு கோரிக்கை ஒன்றை பதிவிட்டு இருந்தார்.
அந்த பதிவில், "மாண்புமிகு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் அவர்களுக்கு பணிவான வேண்டுகோள். 11-10-2021 அன்று நான் தங்களிடம் லால்குடி நகராட்சிக்கு பாதாள சாக்கடை திட்டம் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன் என்பதனை தங்களின் நினைவுக்கு கொண்டு வருகிறேன். நிறைவேற்றி தருவீர்களா?" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications