“தேர்தல் தோல்வி பயத்தால் தவெக அலுவலகத்தை எரித்துள்ளனர்”.. ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு
திருச்சி: திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதியிலிருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அலுவலகம் இன்று அதிகாலை சிலரின் அரசியல் தூண்டுதலால் எரிக்கப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 233 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது. தவெகவின் அரசியல் வருகை இந்த தேர்தலில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து பல விதமான விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் தவெக தேர்தல் அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

திருச்சி மாவட்டம் ஶ்ரீரங்கம் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக ரமேஷ் என்பவர் போட்டியிடுகிறார். இந்த சட்டமன்றம் தொகுதிக்கு உட்பட்ட அந்தநல்லூர் ஒன்றியம், பெட்டவாய்த்தலை பகுதியில் தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தவெகவினர் தேர்தல் சம்பந்தமான பணிகளை கவனித்து வந்தனர்.
இந்நிலையில் இந்த அலுவலகம் மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக வேட்பாளர் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார். அதோடு அங்கிருந்து தவெக பதாகைகளும் கிழிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அந்த பகுதி தவெக ஒன்றிய செயலாளர் தலைமையில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "திருச்சி மாவட்டம் திருவரங்கம் தொகுதியிலிருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அலுவலகம் இன்று அதிகாலை சிலரின் அரசியல் தூண்டுதலால் எரிக்கப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அலுவலகத்தை எரித்தது மட்டுமில்லாமல், சுற்றி இருந்த கட்சி பேனர்களை எல்லாம் கிழித்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.
'தேர்தல் தோல்வி பயம் நாளுக்கு நாள் அதிகரிப்பதன் வெளிப்பாடாகவே அவர்கள் இந்த செயலை செய்திருக்கிறார்கள்' என்று பார்க்கும் மக்களுக்குக் கண்கூடாகத் தெரிகிறது. மக்கள் செல்வாக்கை இழந்த மக்கள் விரோத ஆதிக்கவாதிகள், மக்கள் நமது கழகத்திற்குக் கொடுத்துவரும் பேராதரவை பார்த்து பொறுத்துக்கொள்ள முடியாமல், இதுபோல் குண்டர்களை ஏவி அராஜக செயலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தேர்தல் ஆணையத்தின் உறுதியான உத்தரவின் பேரில் இந்த வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறை உடனடியாக கைது செய்து, உரிய நடவடிக்கையினை எடுக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை நாளன்று சட்டம் ஒழுங்கை காக்கும் வகையில், குற்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக தேர்தல் ஆணையம் தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.













Click it and Unblock the Notifications