அன்பில் மகேஷின் மாமனாக நிற்கிறேன்! 15 ஆண்டுகள் கழித்து திருச்சியில் மேடையேறிய திருச்சி சிவா கர்ஜனை!
திருச்சி: சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு திருச்சியில் திமுக நிகழ்ச்சியில் மேடையேறி பேசிய திருச்சி சிவா அன்பில் மகேஷின் மாமனாக நிற்கிறேன் என பெருமிதம் தெரிவித்தார்.
திருச்சி சிவாவின் அருமை, பெருமைகள் அறிந்து அவரை எத்தனையோ திமுக நிர்வாகிகள் தங்கள் ஊர்களுக்கு வரவழைத்து தேதி கேட்டு வாங்கி பொதுக்கூட்டங்கள் நடத்தியிருக்கின்றனர்.
ஆனால் திருச்சியில் மட்டும் திருச்சி சிவாவை அழைத்து நிகழ்ச்சிகள் நடத்த நிர்வாகிகள் முன்வராத நிலை இருந்தது.

ஸ்டாலின் பிறந்தநாள்
முதலமைச்சர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை ஒட்டி திருச்சி மலைக்கோட்டை பகுதியில் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும், பொதுக்கூட்டமும் நேற்றிரவு நடைபெற்றது. அமைச்சர் அன்பில் மகேஷ் அழைப்பின் பேரில் இந்தப் பொதுக்கூட்டத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளூரில் நடைபெறும் கட்சி பொதுக்கூட்டத்தில் மேடையேறியதால் உற்சாகம் பொங்க பேசினார் திருச்சி சிவா.

திருச்சி சிவா
நீண்ட நாட்களுக்கு பிறகு பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காக அன்பில் மகேஷ் தன்னிடம் தேதி கேட்டதாகவும் அவர் கேட்டவுடன் தாம் ஒப்புக் கொண்டதாகவும் கூறிய திருச்சி சிவா, தாம் பொதுவாக உறவுமுறை வைத்து பேச மாட்டேன் என்றும் ஆனால் இந்த இடத்தில் அன்பில் மகேஷின் மாமனாக நிற்கிறேன் எனவும் உணர்ச்சிப் பெருக்குடன் பேசினார். தங்கள் வீட்டுப் பிள்ளை மாநிலத்தின் அமைச்சராக இருப்பது தனக்கு பெருமை தருவதாக திருச்சி சிவா கூறினார்.

திடீர் திருப்பம்
திருச்சியில் முக்கியத் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டங்களில் மட்டும் திருச்சி சிவா கலந்துகொண்டு வந்தார். மற்றபடி உள்ளூர் நிர்வாகிகள் நடத்தும் எந்த நிகழ்ச்சிகளுக்கும் அவருக்கு அழைப்புச் செல்லாததால் அவரும் பங்கேற்பதை தவிர்த்து வந்தார். இந்நிலையில் திருச்சி திமுகவின் திடீர் திருப்பமாக நேற்றைய நிகழ்வு நடந்துள்ளது. அமைச்சர் அன்பில் மகேஷ் ஆதரவாளர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் இனி அடுத்தடுத்து அவர் தொடர்ச்சியாக பங்கேற்பார் எனத் தெரிகிறது.

டெல்லி அரசியல்
டெல்லியை மையமாக வைத்து திருச்சி சிவா அரசியல் செய்து வந்தாலும் உள்ளூரில் கட்சி நிகழ்ச்சிகளில் பேச முடியவில்லையே என்ற வருத்தமும், ஆதங்கமும் அவருக்கு உள்ளூர இருந்து வந்தது. அந்த வருத்தத்தை போக்கும் வகையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அவரை அழைத்து பொதுக்கூட்டம் நடத்தியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications