ரியல் ‘நாம ஜெயிச்சிட்டோம் மாறா' சம்பவம்! சிக்கலில் சிதறாத கவனம்! 141 உயிர் காத்த குலசாமிகள் இவங்க.!
திருச்சி: லேண்டிங் கியரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக திருச்சி புதுக்கோட்டை எல்லைப் பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக வட்டமிட்ட ஏர் இந்தியா ஏஎக்ஸ்பி 613 விமானம் திருச்சியில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இந்த நிலையில் பதற்றமான சூழலில் சிறப்பாக செயல்பட்ட விமானத்தின் விமானிகளுக்கு பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து இன்று மாலையில் 5.40 மணிக்கு 141 பயணிகள் மற்றும் விமான பணியாளர்களுடன் ஏர் இந்தியா ஏஎக்ஸ்பி 613 என்ற விமானம் சார்ஜா புறப்பட்டு சென்றது. விமான நிலையத்தின் ஓடுதளத்தில் இருந்து மேலே பறந்த விமானத்தில் சிறிது நேரத்தல் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

லேண்டிங் கியரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் விமானங்களின் சக்கரங்கள் உள்ளே செல்லவில்லை. ஹைட்ராலிக் பிரச்சனை ஏற்பட்டதால் சக்கரங்களை உள்ளே இழுக்க முடியாமல் விமானம் பறந்துள்ளது.
இதையறிந்த விமானி உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து விமானத்தை அவசரமாக தரையிறக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அந்த விமானம் புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தமலை மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் வட்டமடித்து கொண்டிருந்தது. சுமார் 2.30 மணிநேரம் வானில் வட்டமடித்த விமானம் எமர்ஜென்சி முறையில் பத்திரமாக திருச்சி விமான நிலையத்தில் இரவு 8.30 மணிக்கு பத்திரமாக தரையிறங்கியது.
இதனையடுத்து பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக விமானத்தில் இருந்து வெளியேறினர். தொடர்ந்து விமானித்திலிருந்து வெளியேறிய பயணிகளை அங்கிருந்த பொதுமக்கள் அரசு ஊழியர்கள் கைதட்டி உற்சாகமாக வரவேற்றனர். அவர்கள் சிறிது ஓய்வுக்கு பிறகு தனி விமானம் மூலம் மீண்டும் சார்ஜா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் விமானத்தை பத்திரமாக தரை இயக்கிய விமானிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட ஏர் இந்தியா ஏஎக்ஸ்பி 613 விமானத்தை இரு விமானிகள் இயக்கியுள்ளனர். முதன்மை விமானியாக இக்ராம் ரிஃபாட்லி ஃபஹ்மி ஜைனல் என்பவரும், கோ-பைலட்டாக மித்ராயி ஸ்ரீ கிருஷ்ணா ஷீடல் என்ற இளம் பெண் விமானியும் பணியாற்றியுள்ளனர். விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை முதன்மை விமானியான இக்ராம் ரிஃபாட்லி ஃபஹ்மி ஜைனலே கண்டறிந்து அதனை விமான கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவரது அறிவுறுத்தலில் பேரிலேயே இணை விமானியான மித்ராயி விமானத்தை இயக்க உதவியாக இருந்தோடு, தரையிறக்கும் போதும் உதவியாக இருந்துள்ளார். விமானம் பத்திரமாக தரையிறங்கியதும், அவர்கள் அங்குள்ள விமானிகள் அறையில் ஓய்வெடுத்தனர். பின்னர் விமான நிலையத்தில் இருந்து அவர்கள் வெளியேறிய போது கைதட்டி ஆரவாரமாக வரவேற்றனர்.
இந்நிலையில் முதன்மை விமானியாக இக்ராம் ரிஃபாட்லி ஃபஹ்மி ஜைனலுக்கும், கோ-பைலட் மித்ராயி ஸ்ரீ கிருஷ்ணா ஷீடலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்,"விமானம் நம்முடைய விராலிமலை, இலுப்பூர், களமாவூர், கீரனூர் பகுதிகளில் சுற்றிவந்தபோது மக்களின் வேண்டுதல்களும், பரிதவிப்பும் சொல்லிலடங்காதது.
விமானம் பத்திரமாக தரையிறங்கிய பின்னர் பரிதவித்த உறவினர்கள், மக்கள் மற்றும் ஊழியர்களின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ஒட்டுமொத்த மக்களின் இதயங்களிலும் விமானிகள் Iqrom Rifadly Fahmi Zainal, Maitryee Shrikrishna Shitole உயர்ந்து நிற்கிறார்கள். பேரன்பும், நன்றியும்! ஜெயிச்சிட்ட மாறா" என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications