ஜெயிலுக்கு போகக்கூட நான் ரெடி.. டெல்டா விவசாயிகள் எலிக்கறி சாப்பிட போறாங்க! வார்னிங் கொடுத்த அன்புமணி
திருச்சி: காவிரியின் குறுக்கே மேகதாதுவை தடுத்து நிறுத்துவதற்காக நான் சிறைக்கு செல்லவும் தயாராக இருக்கிறேன் எனவும், மேகதாது அணையை கட்டினால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மீண்டும் எலிக்கறி சாப்பிடக்கூடிய சூழல் உருவாகும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணையை கட்ட வேண்டும் என கர்நாடக அரசு துடித்து வரும் நிலையில் அதை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நான்கு நாட்கள் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
அந்தவகையில் திருச்சியில் கல்லணையை பார்வையிட்ட பின் நடைப்பயணம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ்," பெங்களூருவின் குடிநீர் தேவைக்காக நாங்கள் மேகதாதுவில் அணை கட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது என கர்நாடகா முதலமைச்சர் சிவக்குமார் கூறுகிறார்.

அன்புமணி ராமதாஸ்
ஆனால் பெங்களூருவின் குடிநீர் தேவை வெறும் 5 டிஎம்சி மட்டுமே அதற்கு எதற்காக எழுவது டிஎம்சியில் நீங்கள் அணை கட்டுகிறார்கள் யாரை ஏமாற்ற பார்க்கிறீர்கள்? தமிழ்நாட்டின் நீர் மேலாண்மை சார்ந்த பிரச்சினைகளுக்காகவும் காவிரி பாலாறு வைகை தாமிரபரணி உள்ளிட்ட பல்வேறு நதிகளை மீட்கவும் சில ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவது சம்பந்தமாகவும் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் அவர்களை விரைவில் சந்தித்து சில ஆலோசனைகளை வழங்க திட்டமிட்டு உள்ளோம்.
மேகதாது அணை
கர்நாடகா, கேரளா, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆற்று மணலை எடுப்பதற்கு தடை எடுக்கக்கூடிய நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் தடையில்லாமல் ஆற்று மணல் திருடப்படுகிறது. மேகதாது அணை விவகாரம் சம்பந்தமாக கர்நாடகா அரசு எப்படியாவது அணையை கட்டிவிட வேண்டும் என தீவிரமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டில் அது குறித்த விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை. எந்த கட்சியிலிருந்து எந்த கட்சிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தாவுகிறார்கள் என்பது குறித்துதான் விவாதங்கள் நடைபெற்று கொண்டு இருக்கிறது.
அனைத்துக் கட்சிக் கூட்டம்
தமிழக முதலமைச்சர் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும். அதுமட்டுமில்லாமல் அனைத்து கட்சி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை டெல்லிக்கு அழைத்துச் சென்று அங்கு பிரதமர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டக்கூடாது என தமிழக அரசு கடுமையான நெருக்கடி கொடுக்க வேண்டும்.
டெல்டா
மத்திய அரசு உடன்படாத பட்சத்தில் அங்கேயே அனைவரும் ஆக சேர்ந்து டெல்லியில் போராட்டத்தை நடத்த வேண்டும். காவிரி விவகாரம் சம்பந்தமாக எந்த போராட்டத்திற்கும் நான் தயாராக இருக்கிறேன். மேகதாது விவகாரத்தில் காவிரி நதிநீரை பாதுகாப்பதற்காக நான் சிறைக்கு செல்ல கூட தயாராக இருக்கிறேன். குருவையில் டெல்டா மாவட்டத்தில் ஆறரை லட்சம் ஏக்கரில் விவசாயம் நடைபெற்று இருக்க வேண்டிய இடத்தில் தற்போது ஒன்றரை லட்சம் ஏக்கரில் மட்டுமே விவசாயம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
எலிக்கறி
அதுவும் நிலத்தடி நீரை நம்பி மட்டுமே விவசாயம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது மேகதாதில் அணையும் கட்டி விட்டால் இனிமேல் அந்த விவசாயம் கூட செய்ய முடியாத மோசமான சூழல், வறட்சி உருவாகி விடும். பிறகு டெல்டா மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மீண்டும் எலிக்கறி சாப்பிட வேண்டிய சூழல் ஏற்படும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு இளைஞர்கள் பெண்கள் என அனைத்து தரப்பு மக்களும் காவிரி நீரை பாதுகாக்க போராட வேண்டும். ஜல்லிக்கட்டுக்காக எப்படி அனைத்து தரப்பினரும் திரண்டு ஒற்றுமையோடு போராட்டம் நடத்தினோமோ அதுபோல நாம் அனைவரும் திரண்டு போராட்டம் நடத்தினால்தான் மேகதாது அணைக்கட்டும் சதி திட்டத்தை முறியடிக்க முடியும்" என்று தெரிவித்தார்.














Click it and Unblock the Notifications