திமுக எம்எல்ஏ ஆஸ்டின், சீனிவாசனுக்கு ரூ.50 கோடி ஆபர் கொடுத்துருக்காங்க.. ஆளுநரிடம் புகாரளித்த திமுக!
சென்னை: தவெக அமைச்சரவை கூட்டத்தில் விஷ்ணு ரெட்டி மற்றும் ஜான் ஆரோக்கியசாமி பங்கேற்றது தொடர்பாக ஆளுநர் அர்லேகரிடம் திமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தவெக ஆட்சியில் அதிகார துஷ்பிரயோகம் நடப்பதாக கூறிய ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்களாக இல்லாதவர்கள் கூட அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். அதுமட்டுமல்லாமல் திமுக எம்எல்ஏ ஆஸ்டின் மற்றும் சீனிவாசன் ஆகியோரை தவெகவில் இணையக் சொல்லி பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும் கூறியுள்ளார்.
தவெக ஆட்சியில் நடக்கும் குதிரை பேரம், ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர் அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றது தொடர்பாக ஆளுநர் அர்லேகரிடம் திமுக சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக எம்பி வில்சன், திமுக எம்எல்ஏ ஆஸ்டின் மற்றும் முன்னாள் எம்எல்ஏ பரந்தாமன் ஆகியோர் ஆளுநரை நேரில் சந்தித்து புகாரளித்துள்ளனர்.

இதன்பின் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழ்நாட்டில் நடக்கும் குதிரை பேரம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பாக ஆளுநரிடம் புகார் அளித்தோம். ஜூலை 1ஆம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அரசுக்கு தொடர்பில்லாத 2 பேரான ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி அமைச்சர்களை விட அதிகாரம் பெற்றவர்களாக அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார்கள்.
இப்படியொரு கேவலமான நிலை தவெக ஆட்சியில் அரங்கேறி வருகிறது. அந்த 2 பேர் அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க என்ன அதிகாரம் இருக்கிறது என்று கேட்ட போது, ஆளுநர் சொன்ன பதில் எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. எங்களின் கருத்தை கேட்ட ஆளுநர், அவர்கள் 2 பேரையும் முதல்வர் விஜய் அமைச்சராக்கி இருக்கலாமே என்று கூறினார்.
இது தவறு என்பதை ஆளுநரே ஒப்புக்கொள்ளும் அளவிற்கு அவரின் பேச்சு அமைந்திருந்தது. அதேபோல் அனிதா ராதாகிருஷ்ணன் அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டார். அவதூறு வழக்கில் கைது செய்வதே கிடையாது. அவதூறு வழக்கில் விசாரணையே தேவையில்லை. நீதிமன்ற காவலில் எடுக்கவே மாட்டார்கள். ஆனால் அனிதா ராதாகிருஷ்ணனை 5 மணி நேரம் போலீசார் துன்புறுத்தி இருக்கிறார்கள்.
தவெகவில் இணைய அனிதா ராதாகிருஷ்ணனை போலீசார் வற்புறுத்தி இருக்கிறார்கள். அதேபோல் நாகர்கோவில் எம்எல்ஏ ஆஸ்டினிடம் தவெகவுக்கு வாருங்கள்.. என்ன அமைச்சரவை வேண்டுமானாலும் கொடுக்கிறோம் என்று ஆஃபர் கொடுத்துள்ளார்கள். நாங்கள் ஆதாரத்துடன் நிரூபிக்கிறோம். வேப்பனஹள்ளி தொகுதியின் எம்எல்ஏ சீனிவாசனிடமும் ரூ.50 கோடி கொடுக்கிறோம்.
வாரியத் தலைவர் பதவி வேண்டுமானாலும் கொடுக்கிறோம் என்று பேசியுள்ளார்கள். அதேபோல் தவெகவில் இணைந்த விஜயபாஸ்கர், அதிமுக எம்எல்ஏ ஓ.எஸ்.மணியனிடம் பேசியுள்ளார். ஆள் பிடிப்பதற்காகவே தவெக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. தமிழக பொறுப்பாளர் என்ற முறையில் ஆளுநரிடம் முறைப்படி புகார் கொடுத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications