Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிலைகளை உடைக்க மாட்டோம்.. கோவில் முன்பிருந்து அகற்றி பொது இடத்தில் வைப்போம்.. அண்ணாமலை விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: சிலையை உடைக்கும் அளவுக்கு நாங்கள் கேவலமானவர்கள் கிடையாது. அப்புறப்படுத்தப்படும் எல்லா சிலைகளும் பொது இடங்களில் வைக்கப்படும். சாதி, மதத்தை வைத்து சண்டை போடும் அரசியல் நமக்குத் தேவையில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் கடந்த ஜூலை 28ஆம் தேதி இராமேஸ்வரத்திலிருந்து நடைபயணத்தைத் தொடங்கி தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். மூன்றாம் கட்ட நடைப்பயணத்தை திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியில் கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கிய அண்ணாமலை, 100வது தொகுதியாக திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதியில் நவம்பர் 7ஆம் தேதி மாலை நடைப்பயணத்தை மேற்கொண்டார்.

BJP Annamalai says that All discarded idols will be placed in public places

ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற பாதயாத்திரையில் பங்கேற்று, அங்கு மக்கள் மத்தியில் பேசிய அண்ணாமலை, "1967 ஆம் ஆண்டு திமுக முதல் முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு ஸ்ரீரங்கம் கோவிலின் வெளியே ஒரு பலகையை வைத்தனர். அதில் கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்று ஒரு கம்பத்தை வைத்து பலகைகளை வைத்துள்ளனர். இந்த ஸ்ரீரங்கம் மண்ணில் பாஜக ஒரு உறுதி எடுத்துக் கொள்கிறது. தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைந்ததும் முதல் வேலையாக அந்த கம்பமும், பலகையும் அப்புறப்படுத்தப்படும். அவற்றை அகற்றி தமிழ் புலவர்களின் சிலைகளும், சுதந்திர போராட்ட வீரர்களின் சிலைகளும் வைக்கப்படும்." என்றார்.

மேலும், "தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி வந்த முதல் நொடியிலே தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் முன்பும் அகற்றி காட்டுவோம். பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததும் இந்து சமய அறநிலையத்துறை என்ற அமைச்சகமே இருக்காது. இந்து சமய அறநிலையத்துறையின் கடைசி நாள் பாஜக ஆட்சிக்கு வந்த முதல் நாளாகத்தான் இருக்கும்" என்று சூளுரைத்தார் அண்ணாமலை.

இதற்கு பதிலடி கொடுத்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, "கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் வந்தாலும் வருமே தவிர, பாஜகவுக்கு ஆட்சி அதிகாரம் என்பது தமிழகத்தில் கிடைக்காது. அண்ணாமலை போன்றோர் அதிகாரத்தில் கையெழுத்திடுகின்ற வாய்ப்பை தமிழக மக்கள் எந்நாளும் வழங்கமாட்டார்கள். பாஜகவுக்கு ஆட்சி அதிகாரம் என்பது தமிழகத்தில் எத்தனை குட்டிக் கர்ணங்கள் அடித்தாலும், எத்தனை ஐ.டி ரெய்டுகள் நடத்தினாலும், எத்தனை அமலாக்கத் துறை ரெய்டுகள் நடத்தினாலும் கிடைக்காது" என்று தெரிவித்தார்.

மேலும், அதிமுக முன்னாள் அமைச்சர்களும், அண்ணாமலையின் பேச்சைக் கண்டித்துள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, "அண்ணாமலை சொன்னதற்காக அறநிலையத்துறையை கலைக்க முடியுமா? அறநிலையத்துறை தொடர்ந்து செயல்பட வேண்டும்" என்றார். அதேபோல, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "கடல் வற்றி கருவாடு சாப்பிட நினைத்த கொக்கு, குடல் வற்றி செத்ததாம். முதலில் பாஜக இங்கு ஆட்சிக்கு வரட்டும் பார்க்கலாம்" எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று திருச்சியில் நடைபெற்ற பாதயாத்திரையைத் தொடர்ந்து, பாஜக பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "நேற்று ஸ்ரீரங்கத்தில் அரங்கநாதர் கோவில் முன்பாக பேசும்போது ஒன்றைச் சொன்னேன். 2026ல் மக்கள் ஆசி பெற்று பாஜக ஆட்சிக்கு வரும்போது, முதல் காரியமாக கோவிலுக்கு வெளியே இருக்கும் ஒரு பலகையை அகற்றுவோம் எனக் கூறினேன்.

கோவிலுக்குச் செல்லும் அனைவருமே பக்தியோடு செல்வார்கள். கோவில் வாசலுக்கு போகும்போது, இதைப் படித்துவிட்டுத்தான் போக வேண்டும் என திமுக அரசு ஒன்றை வைத்துள்ளது. கடவுளை நம்புபவன் முட்டாள், காட்டுமிராண்டி என்பது போன்ற வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. அதைப் பார்க்காமல் கோவிலுக்குள் யாரும் செல்ல முடியாது. அதன் காரணமாகவே, அந்த வாக்கியம் இருக்கும் பலகை அந்த இடத்தில் இருக்காது எனக் கூறினேன்.

திமுகவினர், அமைச்சர்கள் காலை முதல் மாற்றி மாற்றிக் கதறிக் கொண்டிருக்கிறார்கள். நம் அரசியல் வளர்ச்சி அரசியல். எல்லா மதமும் சம்மதம் என்ற அரசியல். ஒரு மசூதிக்குப் போனால், தேவாலயத்துக்கு போனால் இதைப் போன்ற ஒரு வாக்கியம் இருக்காது. ஆனால், கோவிலுக்கு வெளியே இப்படி ஒரு வாக்கியம் இருந்தால் எப்படி ஏற்றுக்கொள்வது? மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்வதற்கு முன்பு முத்துராமலிங்கத் தேவரையும், வைத்தியநாதய்யரையும் பார்த்துவிட்டு கோவிலுக்குச் செல்லலாம்.

நம் கோவில்களில் சில மனிதர்கள், மற்ற சிலரை வரக்கூடாது என தடை போட்டபோது, அதை உடைத்து, எல்லா மனிதர்களும் சமம், அனைவருக்கும் கோவிலுக்கு செல்ல உரிமை உண்டு என்று சொன்ன 2 மனிதர்களின் சிலை மதுரையில் உள்ளது. 13ஆம் நூற்றாண்டில் மாலிக் கபூர் படையெடுத்தபோது நம்பெருமான் மீது கை வைப்பதற்கு முயற்சி செய்தார்கள். அந்தச் சிலையை காப்பாற்றி, இந்தியா முழுவதும் எடுத்துச் சென்று, ஸ்ரீரங்கத்துக்கு ஆபத்து அகன்ற பிறகு ஸ்ரீரங்கத்திற்குள் கொண்டு வந்து வைத்தார்கள்.

12 ஆயிரம் வைணவர்கள் தங்கள் ரத்தத்தை கொடுத்து காப்பாற்றியது ஸ்ரீரங்கம் கோவில். நமக்கு இந்த பழைய பொய் அரசியல் வேண்டாம். 1967ல் இருந்து மதங்களை ஒன்றுக்கொன்று சண்டை போட வைத்த அரசியல், சாதிகளை சண்டை போட வைத்த அரசியல் நமக்கு வேண்டும். பாஜக புதிய அரசியலை கையில் எடுப்போம். யாரெல்லாம் இந்து தர்மத்திற்காக பாடுபட்டார்களோ அவர்கள் முன்வைத்த அரசியலை முன்னெடுப்போம்.

சிலையை உடைக்கும் அளவுக்கு நாங்கள் கேவலமானவர்கள் கிடையாது. சிலையாக இருந்தாலும் சரி, வாசகமாக இருந்தாலும் சரி, பொது இடத்தில் எங்கே இருக்க வேண்டுமோ அங்கே இருக்கும். அப்புறப்படுத்தப்படும் எல்லா சிலைகளும் பொது இடங்களில் வைக்கப்படும். அவரவருக்கு பிடித்த தலைவர் சிலைகளுக்குப் போய் மாலை போட்டுக் கொள்ளலாம். அவரவர் விரும்பும் சித்தாந்தத்தை கடைபிடிக்கலாம். அப்படித்தான் ஜனநாயகம் இயங்க வேண்டும். சிலையை உடைப்பவர்களும், திருடுபவர்களும் நீங்கள் தான். நாங்கள் இல்லை." எனப் பேசியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+