மணப்பாறை அருகே நடந்த கோர விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்!
திருச்சி: மணப்பாறை அருகே இன்று மாலை நிகழ்ந்த கோர விபத்தில் 5 பேர் பலியான நிலையில், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், உயிர்ழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து நிவாரணம் அறிவித்துள்ளார்.
திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து திருச்சி மணப்பாறை அருகே உள்ள கல்கொத்தனூர் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர் திசையில் வந்த கார் டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனை தாண்டி வந்து பேருந்து மீது மோதியதில் நிலை தடுமாறிய பேருந்து சாலையிலிருந்து பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது.

இந்தக் கோர விபத்தில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தின் போது ஏற்பட்ட பயங்கர சத்தத்தை அடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்று பார்த்த போது பலரும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை அறிந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மணப்பாறை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் பற்றிய தகவல் அறிந்த திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்து குறித்து விசாரணை நடத்தினர்.
காரில் சென்றவர்கள் மணப்பாறை அருகே உள்ள ஆளிப்பட்டி மற்றும் கே. உடையாபட்டி, பில்லூரை சேர்ந்த நாகரத்தினம், ஐயப்பன், முத்தமிழ்ச்செல்வன் மணிகண்டன், தீனதயாளன் உள்ளிட்ட 5 பேர் தான் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சம்பவம் பற்றி தகவல் அறிந்த திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மற்றும் மணப்பாறை எம்.எல்.ஏ அப்துல் சமது ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்தக் கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விபத்தில் உயிரிழந்த முத்தமிழ்செல்வன், நாகரத்தினம், ஐயப்பன், மணிகண்டன், தீனதயாளன் ஆகிய ஐந்து பேரின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications