"இந்தியா" மீது பாஜகவுக்கு பயம் இருக்கிறது! அடுத்து முதல்வர் ஸ்டாலின் சொன்ன வார்த்தை! கவனித்த கூட்டம்
திருச்சி: விசிக சார்பில் திருச்சியில் நடந்த 'வெல்லும் ஜனநாயகம்' மாநாட்டில் கலந்து கொண்ட திருமாவளவன் பாஜகவை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
திருச்சி மாவட்டம் சிறுகனூர் பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் 'வெல்லும் ஜனநாயகம்' என்ற தலைப்பில் மாநாடு ஒன்று நடைபெற்றது. இந்த மாநாடு விசிக தலைவரும், எம்.பியுமான திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது.

சிறுகனூர் பகுதியில் நடைபெற்ற இந்த மாநாட்டில் திருமாவளவன் தீர்மானங்களை வாசித்தார். ஆளுநர் பதவியை ஒழித்திடுவோம் உள்ளிட்ட தீர்மானங்கள் இதில் இடம் பெற்றிருந்தன.
முதலமைச்சர் ஸ்டாலின்: இந்த மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "திருமாவளவனுடன் திமுகவுக்கு உள்ளது கொள்கை உறவு. கடந்த காலங்களில் எப்போதும் என்னோடு தோளோடு தோள் நின்றவர் திருமாவளவன். சமூக நீதி, சமத்துவம் கொண்ட ஆட்சியை நாடு முழுக்க அமைக்க வெல்லும் ஜனநாயகம் மாநாட்டை திருமா நடத்துகிறார்
பட்டியலின மக்களைப் பாதுகாப்பது தான் திராவிட மாடல் அரசு.. அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாளாக அறிவித்தோம்.. தமிழ்நாட்டில் பாஜக என்பது பூஜ்ஜியம்.. எனவே, அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.. இந்தியாவில் ஜனநாயகத்தை, மக்களாட்சி, பன்முகத்தன்மையைக் காப்பாற்ற பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது.
மாநிலங்களே இருக்காது: பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா என்ற கூட்டாட்சி இருக்காது.. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம், மாநிலங்கள் என்ற நிலையே இருக்காது. மாநிலங்களை காப்ரேஷன் போல மாற்றுவார்கள். நமது கண்ணுக்கு முன்னாலே ஜம்மு காஷ்மீர் சிதைக்கப்பட்டது. அரசியல் தலைவர்கள் வீட்டுச் சிறை வைக்கப்பட்டனர். இதுவே பாஜக பாணி அரசியல்., இதுவே அனைத்து மாநிலங்களிலும் ஏற்படும்.
கேள்விகள் இல்லாத நாடாளுமன்றம், 147 எம்பிக்கள் சஸ்பெண்ட் நாட்டிற்கே அவமானம்- முதல்வர் ஸ்டாலின் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு அவமானம்.. இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்றுவதே பாஜகவின் நோக்கம்.. பாஜக வரக்கூடாது என்ற ஒற்றை லட்சியம் இருக்க வேண்டும்.. பாஜகவுக்கு எதிரான வாக்குகள் எதுவும் சிதறக்கூடாது. பன்முகத்தன்மை, மதச்சார்பின்மையைக் காக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது
வரலாறு சொல்ல வேண்டும்: ஜனநாயகம் வெல்லும் என்று சொன்னால் மட்டும் போதாது.. அதற்கு நாம் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும்.. இந்தியா கூட்டணி அமைந்தது இந்தியாவை வென்றது என்று வரலாறு சொல்ல வேண்டும். சண்டிகர் தேர்தலில் இந்தியா கூட்டணி வெல்லும் என்ற பயத்திலேயே தேர்தலையே ரத்து செய்துள்ளனர். பாஜகவுக்கு ஏற்பட்டுள்ள பயத்தை இந்தியா கூட்டணி தலைவர்கள் உணர வேண்டும்.
இந்தியா கூட்டணியைத் தனிப்பட்ட கட்சிக்கு எதிரான கூட்டணி என்று சுருக்கிவிட முடியாது. ஒற்றுமையுடன் செயல்பட்டால் நாடாளுமன்றத் தேர்தலில் வெல்ல முடியும். இந்தியாவைக் கூட்டாட்சி நாடாக மாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்கு இருக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.
திருமாவளவன் பேச்சு: முன்னதாக இந்தக் கூட்டத்தில் பேசிய திருமாவளவன், "ஆளுநர் பதவி என்பது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட ஒன்று.. நடுநிலைக்கும் அவருக்கும் எந்தவொரு தொடர்பும் இருப்பதில்லை. தன்னை நியமிக்கும் கட்சியின் முகவராகவே அவர் செயல்படுகிறார்.. மாநில அரசுகளுக்குத் தொல்லை தர ஒன்றிய அரசால் ஆளுநர் பயன்படுத்தப்படுகிறார்" என்றார்.












Click it and Unblock the Notifications