”நம்பிக்கை இழக்காதீர்கள்..தற்கொலையால் எதுவும் சாதிக்க போவதில்லை” மாணவர்களுக்கு அன்பில் மகேஷ் அட்வைஸ்
திருச்சி: மாணவர்கள் நம்பிக்கை இழந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் வேலையில் ஈடுபட வேண்டாம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுரை கூறியுள்ளார்.
இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் தமிழக அரசுப் பள்ளி மாணவர்களில் 80 சதவிகிதம் பேர் தோல்வி அடைந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் சென்னையைச் சேர்ந்த 19 வயது மாணவி ஸ்வேதா நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இப்படி ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு முடிவுகளின் போது, மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் சூழல் தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு தேவையான திட்டங்கள் தொடர்பாக தொகுதி எம்எல்ஏ-வும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். இதனைத்தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், சமூக நீதி என்பது அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும்.

அன்பில் மகேஷ் பேட்டி
பணம் இருப்பவர்களுக்கு ஒரு கல்வி, இல்லாதவர்களுக்கு ஒரு கல்வி என்று இருக்கக்கூடாது என்பது தான் முதலமைச்சரின் கொள்கையாக உள்ளது. எல்லோருக்கும் சமத்துவமான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் எண்ணம். அதனால் இலவசங்களை, நாங்கள் சமூக நலத் திட்டங்களாக பார்க்கிறோம்.

நீட் தேர்ச்சி விகிதம்
நீட் தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்து இருப்பது தெரிய வந்துள்ளது. நீட் தேர்வு வேண்டாம் என சட்ட போராட்டம் ஒரு புறம் நடந்தாலும், நீட் தேர்வு இருக்கும் வரை மாணவர்களை தயார் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் ஹைடெக் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு மனரீதியாகவும் கவுன்சிலிங் அளிக்கப்படுகிறது.

ஹெல்ப்-லைன் நம்பர்
ஒவ்வொரு பள்ளிகளிலும் உயர் கல்வி வழிகாட்டு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. மனதளவில் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் அங்கு கவுன்சிலிங் எடுத்துக்கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் ஹெல்ப்-லைன் நம்பர்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் பல மாணவர்கள் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அன்பில் மகேஷ் அட்வைஸ்
எந்த சூழலிலும் மாணவர்கள் தன்னம்பிக்கை இழக்க கூடாது. உயிரை மாய்த்துக் கொள்ளும் வேலையில் ஈடுபட வேண்டாம். அதனால் நீங்கள் ஒன்றும் சாதிக்க போவதில்லை. மாறாக பெற்றோருக்கும் இந்த சமூகத்துக்கும் நீங்கள் கவலையை கொடுத்துவிட்டு செல்கிறீர்கள் என்பதே உண்மை.

நீட் விலக்கில் நம்பிக்கை
நீட் தேர்வை ரத்து செய்ய ஒட்டுமொத்த கட்சிகளும் ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் வரை கொண்டு சென்றுள்ளோம். சமீபத்தில் கேரளா வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடமும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். நாடாளுமன்றத்திலும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். நீட் தேர்வில் இருந்து கண்டிப்பாக விலக்கு பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications