மீண்டும் திருச்சிக்கு வருகை தரும் பிரதமர் மோடி.. டிரோன்கள் பறக்க தடை.. மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
திருச்சி: பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக நாளை தமிழ்நாடு வருகிறார். இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக திருச்சிக்கு வருகை தருகிறார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு திருச்சியில் மூன்று நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, நாளை (ஜனவரி 19ஆம் தேதி) கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை சென்னையில் தொடங்கி வைக்கிறார். மத்திய அரசு திட்டத்தின் கீழ் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. 2024ஆம் ஆண்டுக்கான கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள், தமிழ்நாடு அரசு மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்படுகிறது.

அண்மையில் டெல்லி சென்ற தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டில் நடைபெற உள்ள கேலோ இந்தியா விளையாட்டு போட்டியைத் தொடங்கி வைக்க, பிரதமர் மோடியை சந்தித்து அழைப்பு விடுத்தார். அதனை ஏற்று, பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 19ஆம் தேதி நாளை 2 நாள் பயணமாக சென்னைக்கு வருகிறார். ஜனவரி 19ஆம் தேதி கேலோ இந்தியா விளையாட்டு போட்டியைத் தொடங்கி வைக்கிறார்.
அடுத்த நாள், ஜனவரி 20ஆம் தேதி திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார் பிரதமர் மோடி. பின்னர், திருச்சியிலிருந்து மதுரை செல்லும் பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் செல்கிறார். இதையடுத்து, தனது பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி மீண்டும் டெல்லி செல்கிறார். பின்னர், 22ஆம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்குச் செல்ல உள்ளார்.
இந்நிலையில் பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு திருச்சியில் மூன்று நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 20ஆம் தேதி வரை திருச்சியில் ட்ரோன்கள் பறக்க விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சியில் கடந்த ஜனவரி 2ஆம் தேதி நாட்டின் பிரதமர் மோடி நேரில் வந்து பாரதிதாசன் பல்கலைகழக விழாவில் கலந்து கொண்டார். இதுமட்டுமல்லாமல் 1000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தையும் திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து திருச்சியை சுற்றி இருக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் முக்கிய திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து பேசினார். இந்நிலையில், மீண்டும் திருச்சிக்கு வருகை தருகிறார் பிரதமர் மோடி.












Click it and Unblock the Notifications