வருவாய் ஆய்வாளர் மீது தாக்குதல்! ஊராட்சி மன்றத் தலைவரை கட்சியிலிருந்து கட்டம் கட்டிய திமுக தலைமை!
திருச்சி: திருச்சி வடக்கு மாவட்ட திமுக பிரமுகரும், நரசிங்கபுரம் ஊராட்சி மன்றத் தலைவருமான மகேஸ்வரனை திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்திருக்கிறார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன்.
கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும் நடந்துகொண்டதால் மகேஸ்வரன் திமுகவிலிருந்து அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக துரைமுருகன் அறிவித்துள்ளார்.

வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் மீது மகேஸ்வரன் மற்றும் அவரது கூட்டாளிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதில் வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுக ஊராட்சி மன்றத் தலைவரின் இந்த செயல் வருவாய் துறை அலுவலர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் தான் நேற்றிரவு இந்த நிகழ்வு நடந்த நிலையில் இன்று காலையே மகேஸ்வரனை கட்சியிலிருந்து கட்டம் கட்டிவிட்டார் துரைமுருகன். முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் ஜப்பானில் உள்ள நிலையில் அமைச்சர் நேருவிடம் மட்டும் இது குறித்து பேசிவிட்டு படபடவென நடவடிக்கை எடுத்துவிட்டார் துரைமுருகன்.
திமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ள மகேஸ்வரன் உள்ளிட்ட 3 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதுடன் தலைமறைவாக உள்ள அந்த மூவரையும் பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இதனால் திருச்சி வடக்கு மாவட்ட திமுகச் செயலாளர் காடுவெட்டி தியாகராஜனுக்கு தர்மசங்கடமான சூழல் உருவாகியுள்ளது.
தூத்துக்குடியில் மணல் அள்ளுவதை தடுத்த வி.ஏ.ஓ. கொலை செய்யப்பட்டு ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் அது போன்றதொரு மற்றொரு நிகழ்வு திருச்சியில் அரங்கேற இருந்தது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications