நீங்கதான்யா எங்களை காப்பாத்தணும்...எம்.ஜி.ஆர். சிலையிடம் மனு கொடுத்த விவசாயிகள்!
திருச்சி: வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வைத்து எங்களை காப்பாற்ற வேண்டும் என திருச்சியில் எம்.ஜி.ஆர். சிலையிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.
உயிரோடு இருக்கக்கூடிய அனைத்து அரசு அதிகாரிகளையும், ஆட்சியாளர்களையும் சந்தித்து மனு கொடுத்து எந்த பயனும் இல்லை. எனவே எம்.ஜி.ஆர். சிலையிடம் மனு கொடுத்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் 57-வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே வேளாண் சட்டங்களை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது விவசாயிகள் சிலர், எம்.ஜி.ஆர். சிலை பக்கத்தில் சென்று விவசாயிகளை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாயும், மற்ற தானியங்களுக்கு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாயும் வழங்க வேண்டும்' உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எம்.ஜி.ஆர். சிலையிடம் மனுவை அளித்தனர்.
இதற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர். ''உயிரோடு இருக்கக்கூடிய அனைத்து அரசு அதிகாரிகளையும், ஆட்சியாளர்களையும் சந்தித்து மனு கொடுத்து எந்த பயனும் இல்லை. எனவே எம்.ஜி.ஆரின் ஆத்மாவாது விவசாயிகளின் பிரச்சனையைத் தீர்த்து வைக்கும்'' என்று கூறி அவருடைய காலில் விழுந்து மனுக்களை கொடுத்தோம் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.