திருச்சியில் பெரிய ரன்வே இருந்திருந்தால், அதிக எரிபொருளுடன் விமானம் முன்பே தரையிறங்கியிருக்கும்
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட ஓடுபாதை இருந்திருந்தால், அதிக எரிபொருள் சுமையுடன் விமானம் மிகவும் முன்னதாகவே தரையிறங்கியிருக்கும் என்று பலரும் சுட்டிக்காட்டி வருகிறார்கள். திருச்சி விமான நிலையத்தில் ஓடுபாதை நீட்டிப்புக்காக நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், உடனே திருச்சி விமான நிலைய விரிவாக்கத்தை தொடங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னைக்கு அடுத்தப்படியாக, தமிழ்நாட்டின் மையப்பகுதியில் உள்ள மிகவும் முக்கியமான விமான நிலையமாக திருச்சி விமான நிலையம் இருக்கிறது. திருச்சி உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்ட மக்களின் வெளிநாட்டு பயணத்துக்கான முக்கியமான வழித்தடமாக உள்ளது. திருச்சி மற்றும் காவிரி டெல்டா பகுதி மக்கள் பலர் சிங்கப்பூர், மலேசியா மற்றும் பல்வேறு வளைகுடா நாடுகளில் வேலை செய்கிறார்கள். இவர்களுக்கு திருச்சி விமான நிலையம் மிகவும் நெருக்கமான விமான நிலையம் ஆகும்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தை பொறுத்தவரை 702 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வருகிறது. கடந்த 2009ம் ஆண்டு கடைசியாக இந்த முனையம் மேம்படுத்தப்பட்டது. இந்த விமான நிலையத்தில் ஆண்டுக்கு 0.49 மில்லியன் பயணிகளை மட்டுமே கையாள முடியும் என்கிற நிலையே இருக்கிறது.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து, நாள்தோறும் 10 வெளிநாட்டு விமானங்கள் இயக்கப்படுகிறது. இதுதவிர 8 உள்நாட்டு விமானங்கள் இயக்கப்படுகிறது. இதன் மூலம் நாள்தோறும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கிறார்கள். சரக்கு சேவையை பொறுத்தவரை முன்பைவிட பலமடங்கு அதிகரித்துவிட்டது. ஆனால் இன்னும் இதில் மிகப்பெரிய அளவில் முன்னேற்றங்கள் தேவைப்படுகிறது.
தற்போதைய நிலையில் பெரிய விமானங்கள் வந்து இறங்கும் வகையில் விமான நிலையத்தை மாற்ற வேண்டும். அதன்படி விமான நிலைய வளர்ச்சிக்கு தேவையான ரன்வே விரிவாக்கப் பணிக்கான நிலம் கையகப்படுத்தும் பணி பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. இதன் காரணமாக கூடுதல் அகலம் கொண்ட நீண்ட இறக்கைகள் மற்றும் அதிக இருக்கைகள் கொண்ட உயர் ரக விமானங்களை இறக்குவதில் சிரமம் இருக்கிறது.. மேலும் பயணிகள் மற்றும் சரக்குகளை கையாள்வதிலும் நீண்ட காலமாக சிரமம் இருந்து இருக்கிறது.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தினை 60,723 சதுரமீட்டர் பரப்பளவில் 2 அடுக்குகளைக் கொண்ட ஒருங்கிணைந்த புதிய முனையமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. அப்படி மாற்றினால், பயன்பாட்டில் உள்ள ஒருங்கிணைந்த பயணிகள் முனையத்தைக் காட்டிலும். அதிநவீன வசதிகளுடன் மூன்று மடங்கு கூடுதல் பயணிகளை கையாளும் திறன் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு திருச்சி விமான நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் தரையிறங்க முடியாமல் இரண்டு மணி நேரமாக வானிலேயே வட்டமடித்தது. இதனால் பயணிகளும், பொதுமக்களும் பீதி அடைந்தனர். ஆனால் நல்ல வேளையாக எந்த அசம்பாவிதமும் இன்றி விமானம் தரையிறங்கியது.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன்கள், திருச்சி விமான நிலையத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட ஓடுபாதை இருந்திருந்தால், அதிக எரிபொருள் சுமையுடன் விமானம் மிகவும் முன்னதாகவே தரையிறங்கியிருக்கும் என்று சுட்டிக்காட்டி வருகிறார்கள். விமான எரிபொருள் குறையும் வரை பல மணிநேரம் வட்டமடித்திருக்க வேண்டிய தேவை இருந்திருக்காது என்றும் கூறுகிறார்கள்.
மேலும் திருச்சி விமான நிலையத்தில் ஓடுபாதை நீட்டிப்புக்காக நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், உடனே திருச்சி விமான நிலைய விரிவாக்கத்தை தொடங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்கள். இதனிடையே 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக விமானத்தை தரையிறக்கி பயணிகளின் உயிரை காப்பாற்றிய விமானி டேனியல் பெலிசோவை பலரும் பாராட்டி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications