எப்படி இருந்த திருநாவுக்கரசர் இப்படி மாறிவிட்டார்... எதிரொலிக்கும் அதிருப்தி குரல்கள்
திருச்சி: திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினரும், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான திருநாவுக்கரசரின் நடவடிக்கைகளால் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர்.
கொரோனா கால நிவாரணப் பணிகளில் திருநாவுக்கரசர் போதிய அக்கறையும், கவனமும் காட்டவில்லை என்பதே அவர்களின் புகாராக உள்ளது.
திருநாவுக்கரசரின் திடீர் அமைதிக்கான காரணம் தெரியாமல் காங்கிரஸ் நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர்.
குறுவை பாசனத்திற்காக... மேட்டூர் அணையை காலதாமதமின்றி திறக்க வேண்டும் -மு.க.ஸ்டாலின்
துணை சபாநாயகர்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதியில் இருந்து 6 முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ள திருநாவுக்கரசர் எம்.ஜி.ஆர். ஆட்சியில் துணை சபாநாயகராகவும் இருந்திருக்கிறார். அதுவும் 27 வயதில் யாரும் அடைய முடியாத உயர் பதவியை இவர் அடைந்தது குறிப்பிடத்தக்கது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்த இவர், தனிக்கட்சி, பாஜக, காங்கிரஸ், என பல அவதாரங்களை எடுத்ததால் நாளுக்கு நாள் தனது செல்வாக்கை இழந்து வந்தார்.
மாநில அரசியல்
ஒரு காலத்தில் புதுக்கோட்டை என்றாலே திருநாவுக்கரசர் பெயர் தான் மக்களுக்கும் சரி, அரசியல் தலைவர்களுக்கும் சரி நினைவுக்கு வரும். அந்தளவு அந்த மாவட்டத்தில் செல்வாக்கை வளர்த்து வைத்திருந்த அவர் தேசியக் கட்சிகளில் இணைந்து மாநில அரசியலில் கவனம் செலுத்த தொடங்கியதால் சொந்த மாவட்ட மக்கள் மத்தியில் தொடர்பை அறுத்துக்கொண்டார்.
ஆர்வமில்லை
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளை உள்ளடக்கிய திருச்சி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு இப்போது சிட்டிங் எம்.பியாக உள்ளார். கொரோனா கால நிவாரணப் பணிகளில் திமுக காட்டும் அக்கறையை திருநாவுக்கரசர் காட்டவில்லை என்பதே அவர் மீது உள்ள முதல் புகாராகும். ஓரிரு முறை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கோரிக்கைகள் வைத்ததோடு சரி தனிப்பட்ட முறையில் அவர் நிவாரணம் வழங்க ஏனோ ஆர்வம் காட்டவில்லை எனக் கூறுகின்றனர் காங்கிரஸ் நிர்வாகிகள்.
வெடிக்கும் திமுகவினர்
இதனிடையே திருச்சி மாவட்ட திமுகவினரோ, இவரை நான்கரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தோம், ஆனால் என்ன பயன் இந்த தருணத்தில் அவர் இப்படி அமைதி காப்பது நல்ல பண்பல்ல என வெடிக்கின்றனர். திருநாவுக்கரசரின் பழைய நடவடிக்கைகளுக்கும், அணுகுமுறைகளுக்கும், தற்போதைய செயல்பாடுகளுக்கும் பெரியளவில் மாற்றம் உள்ளதாக கூறுகின்றனர். இதுவரை அவர் சொல்லிக்கொள்ளும் வகையில் எந்த நிவாரண உதவிகளும் தர வில்லை என குற்றஞ்சாட்டுகின்றனர்.
மாற்றம்
மேலும், இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் தெரிவிப்பதாவது; ''ஒரு காலத்தில் உதவி செய்வதில் திருநாவுக்கரசரை யாரும் அடித்துக்கொள்ள முடியாது, ஆனால் இப்போது என்னவென்றால் எல்லாம் தலைகீழாக உள்ளது. ஊரடங்கால் வேலையின்றி வருமானமின்றி தவிக்கும் கட்சிக்காரர்களுக்கு கூட அவர் உதவி செய்யாதது மிகுந்த கவலையளிக்கிறது'' எனக் கூறினார்.