திருச்சி ரவுடி துரையின் காதலி வீட்டிற்கு வந்த வருமான வரித்துறை.. கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்
திருச்சி: திருச்சியில் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட ரவுடி துரையின் காதலி அனுராதா, மற்றும் துரையின் அக்கா சசிகலா ஆகியோரிடம் இருந்து 11.25 லட்சம் ரூபாய் பணம் வருமான வரித்துறை அதிகாரிகள் மூலம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இருவரையும் போலீசார் அடிதடி தொடர்பாக கைதும் செய்துள்ளனர்.
திருச்சி சோமரசம்பேட்டை எட்டரை கிராமம், பாறைக்குளம் பகுதியை சேர்ந்த 50 வயதாகும் மாற்றுத்திறனாளி முருகேசன். இவரது மனைவி சசிகலா. சசிகலா யார் என்றால், புதுக்கோட்டையில் என்கவுண்ட்டர் செய்யப்பட்ட துரையின் அக்கா ஆவார்.

இந்த நிலையில் சசிகலாவும், துரையின் ரகசிய காதலியான அனுராதாவும் துரையை போலீசார் பிடித்து சென்றதற்கு நீதான் காரணம் என கூறி முருகேசனை கட்டையால் கடுமையாக தாக்கியதுடன், அவர் வீட்டில் வைத்திருந்த செல்போன், பான் கார்டு, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை, ரூ.8 ஆயிரம் ஆகியவற்றை பறித்து சென்றுவிட்டார்களாம். இது தொடர்பாக முருகேசன் சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதையடுத்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரின் கவனத்திற்கு இந்த விவகாரம் சென்றது. அவரது உத்தரவின் பேரில், போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இது தொடர்பாக, சசிகலா, அனுராதா ஆகியோரை தேடி வந்தனர். இந்த நிலையில் இவர்கள் சண்முகா நகரில் உள்ள அனுராதா வீட்டில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
அதன் பேரில் போலீசார் அங்கு சென்று அனுராதா வீட்டில் அதிரடியாக சோதனை செய்தனர். சோதனையில், அங்கு ஒரு பையில் ரூ.11 லட்சத்து 31 ஆயிரத்து 280 இருந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் வருமான வரித்துறை அலுவலருக்கு தகவல் தெரிவித்து அவர்கள் மூலமாக அந்த பணத்தை பறிமுதல் செய்தார்கள்.
மேலும், முருகேசனின் திருட்டு போன செல்போன், ஆதார் கார்டு. ரேஷன் கார்டு, பான் கார்டு. மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, தங்கச் செயின் மற்றும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் கட்டையையும் போலீசார் கைப்பற்றினர். பின்னர் சசிகலா,அனுராதா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் திருச்சியில் பரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications