லேண்டிங் சாதாரணமானதாக இல்லை.. திருச்சி - சார்ஜா விமானம் தரையிறங்கியது எப்படி? பயணிகளின் திகில் தகவல்
திருச்சி: திருச்சி - சார்ஜா ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வானில் இரண்டரை மணிநேரம் வட்டமடித்த விமானம் பத்திரமாக திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. அப்போது விமானத்தில் என்ன நடந்தது? லேண்டிங்கின்போது என்ன நடந்தது? என்பது பற்றி பயணிகள் தங்களின் திகில் அனுபவத்தை பகிர்ந்துள்ளனர்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு தினமும் விமானங்கள் இயங்கி வருகின்றன. அந்த வகையில் இன்று மாலையில் இன்று மாலை 5.40 மணிக்கு 141 பயணிகள் மற்றும் விமான பணியாளர்களுடன் ஏர் இந்தியா ஏஎக்ஸ்பி 613 என்ற விமானம் சார்ஜா புறப்பட்டு சென்றது.

விமான நிலையத்தின் ஓடுதளத்தில் இருந்து மேலே பறந்த விமானத்தில் சிறிது நேரத்தல் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அதாவது லேண்டிங் கியரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் விமானங்களின் சக்கரங்கள் உள்ளே செல்லவில்லை. ஹைட்ராலிக் பிரச்சனை ஏற்பட்டதால் சக்கரங்களை உள்ளே இழுக்க முடியாமல் விமானம் பறந்துள்ளது.
இதையறிந்த விமானி உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். விமானத்தை அவசரமாக தரையிறக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அந்த விமானம் புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தமலை மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் வட்டமடித்து கொண்டிருந்தது. விமானத்தில் அதிகளவில் எரிபொருள் இருந்தது.
அவசர தரையிறக்கம் செய்யும்போது விமானத்தில் அதிகளவிலான எரிபொருள் என்பது இருக்க கூடாது. அப்படி இருந்தால் அவசர தரையிறக்கத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும்போது தீப்பிடிக்க அதிக வாய்ப்பு இருக்கும். இதனால் எரிபொருளை செலவழிக்க விமானம் வானில் வட்டமடித்தது.
சுமார் 2.30 மணிநேரம் வானில் வட்டமடித்த விமானம் எமர்ஜென்சி முறையில் பத்திரமாக திருச்சி விமான நிலையத்தில் இரவு 8.30 மணிக்கு பத்திரமாக தரையிறங்கியது. பயணிகள் பத்திரமாக உள்ளனர். இந்த அவசர தரையிறக்கம் பற்றி பைசல் என்ற பயணி கூறுகையில், ‛‛நாங்கள் நலமாக இருக்கிறோம். யாரும் பயப்பட வேண்டாம். விமானத்தின் தரையிறக்கம் என்பது சாதாரணமாக முறையில் தான் இருந்தது. ஆனாலும் விமானம் தரையிறங்கும்போது ஒரு சர்க்கை உணர்ந்தோம். விமானத்தில் இருக்கும்போது பயமில்லை. இறங்கிய பின் விமான நிலைய பரபரப்பால் தான் பீதியானோம். எங்களின் சார்ஜா பயணம் குறித்து என்னெவன்று தற்பேது வரை தெரியவில்லை. மாற்று விமானம் ஏற்பாடு செய்வார்களா? என்பது தெரியவில்லை. '' என்றார்.
அதேபோல் இன்னொரு பயணியான சாகுல் ஹமீது கூறுகையில், ‛‛விமான கோளாறு பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. நாங்கள் சார்ஜா நோக்கி செல்வதாக நினைத்தோம். அதன்பிறகு தான் விமானம் திருச்சி திரும்புவதை உணர்ந்தோம். நாங்கள் பத்திரமாக இருக்கிறோம். ஆனாலும் விமான லேண்டிங் ஹார்டாக தான் இருந்தது. ரொம்ப ஹார்ட்டாக தான் இருந்தது. நார்மலான லேண்டிங் போல் இல்லை. பயப்படும் படியாக தான் இருந்தது. எங்களை வெளியே விடுகிறார்களா இல்லை என்று தெரியவில்லை. குடும்பத்தினரிடம் பேசினோம். அவர்கள் அழுது கொண்டு இருக்கிறார்கள்'' என்றார்.












Click it and Unblock the Notifications