பட்டப்பகலில் கொத்தனார் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை.. திருச்சியில் பயங்கரம்.. போலீஸ் விசாரணை
திருச்சி: திருச்சியில் பட்டப்பகலில் 5 பேர் கொண்ட கும்பலால் கொத்தனார் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
திருச்சி மாவட்டம் திரவறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால் (38). கொத்தனராக வேலை செய்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக மது, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களுக்கு இவர் அடிமையானதாக தெரிகிறது. அவ்வப்போது போதையில் அங்கு சென்று வருபவர்களிடம் ஜெயபால் தகராறில் ஈடுபடுவது வழக்கம். இதனிடையே, கடந்த வாரம் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும், ஜெயபாலுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. பின்னர் அங்கிருந்தவர்கள் அவர்களை விலக்கிவிட்டு சமாதானம் செய்து அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல ஜெயபால் மதுபோதையில் தனது வீட்டுக்கு முன்பு நின்றுகொண்டு அங்கு வந்து செல்பவர்களை தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்தாக கூறப்படுகிறது. அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் திடீரென பெரிய கற்களை எடுத்து ஜெயபால் மீது வீசியுள்ளது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ஜெயபால் அவர்களிடம் இருந்து தப்பித்து செல்ல முயன்றார். ஆனால் அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள், விடாமல் துரத்தி ஜெயபாலின் தலையில் கற்களை கொண்டு சரமாரியாக தாக்கினர். இதில் தலை முழுவதும் ரத்தம் வடிந்த நிலையில் ஜெயபால் கீழே விழுந்திருக்கிறார். பின்னர் அவர்கள், தாங்கள் வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு ஜெயபாலை கண்மூடித்தனமாக வெட்டினர். இதில் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் ஜெயபால் துடிதுடித்து உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்ததும் திருச்சி மாவட்ட எஸ்.பி. சுஜித்குமார் தலைமையிலான போலீஸார் அங்கு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய கொலையாளிகளை தேடி வருகின்றனர். திருச்சியில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் இடத்தில் பட்டப்பகலில் கொலை நடைபெற்றிருப்பது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications