பள்ளிகளில் அதிகரிக்கும் பாலியல் புகார்கள்.. அமைச்சர் அன்பில் மகேஷ் போட்ட அதிரடி உத்தரவு.. பரபரப்பு
திருச்சி: பாலியல் குற்றச்சாட்டுத் தொடர்பான புகார்களை மாணவிகள் தெரிவிக்கும் முறையை மேலும் எளிமையாக்கத் திட்டமிட்டுள்ளதாகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக போட்டியிடும் திமுகவினருக்கான விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சியைப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மலைக்கோட்டை பகுதி செயலாளர் மதிவாணன் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

தமிழக அரசு உத்தரவு
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், "பாலியல் குற்றச்சாட்டுத் தொடர்பான புகார்களை மாணவிகளும் பெற்றோர்களும் தெரிவிக்கும் முறையை எளிதாக்கத் திட்டமிட்டுள்ளோம். ஒவ்வொரு பள்ளியின் புகார் பலகையிலும் 14417, 1098 இடம் இருக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல் அங்கு அருகில் உள்ள காவல் நிலையத்தின் தொலைப்பேசி எண்ணையும் பதிவிட வேண்டும் எனச் சொல்லி இருக்கிறோம். இது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புகார் எண் போதாது
வெறும் புகார் எண் மட்டும் கொடுத்தால் போதாது, எல்லா இடத்திலும் உளவியல் ரீதியாக ஆலோசனைகள் தேவைப்படுகிறது. இதற்கென மாவட்டந்தோறும் உளவியல் ஆலோசனை வழங்க ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு சுழற்சி முறையில் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஆலோசனை வழங்க நேற்று சென்னையில் நடைபெற்ற மாவட்ட கல்வி அலுவலர்களுடனான கூட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது .

புகார் மையம் எப்படிச் செயல்படுகிறது
14417 புகார் மையம் எப்படிச் செயல்படுகிறது என்பதை விரைவில் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளேன். மாணவர்கள் பாதிக்கக் கூடாது என்பது தான் அரசின் விருப்பம். பாதிக்கப்பட்ட மாணவர்கள், மாணவிகள் யாராக இருந்தாலும் தயங்காமல் புகார் எண்ணைத் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்து புகார் தெரிவிக்கலாம். உரிய நடவடிக்கை முறையாக எடுக்கப்படும்.
Recommended Video

அரசுப் பள்ளிகள்
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 66 லட்சம் என்று இருந்த அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை தற்போது 71 லட்சத்தைக் கடந்துள்ளது. எந்தெந்த அரசுப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு அதிகம் தேவைப்படுகிறதோ அதைச் செய்து கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். வரும் மாணவர்களை அடுத்தடுத்த ஆண்டுகளில் தக்க வைத்துக் கொள்வதே அரசின் விருப்பம். தனியார்ப் பள்ளிகளில் மாணவர்களை முழு கட்டணம் செலுத்த வற்புறுத்தக் கூடாது அவ்வாறு வற்புறுத்தினால் புகார் தெரிவிக்கலாம்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications