அமைச்சர் கே.என்.நேரு 70வது பிறந்தநாள்! ஆட்டம்.. பாட்டம்.. கொண்டாட்டம்.. ஆர்கெஸ்ட்ரா வைத்து அமர்களம்!
திருச்சி: திமுக முதன்மைச் செயலாளரும், மூத்த அமைச்சருமான கே.என்.நேருவின் 70வது பிறந்தநாளையொட்டி அவரது ஆதரவாளர்கள் அமர்களமாக கொண்டாடி வருகின்றனர்.
கட்சியினர், தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள், என பலதரப்பட்டோரும் வாழ்த்துச் சொல்வதற்காக காலையிலேயே திருச்சி தில்லை நகரில் உள்ள அமைச்சர் நேரு இல்லத்தில் குவிந்துவிட்டனர்.
ஆதரவாளர்களின் வாழ்த்து மழையில் நனைந்த அமைச்சர் நேரு, கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கொளத்தூர் கன்னித்தீவா? நேரில் வந்து பாருங்கள்.. ஜெயக்குமாருக்கு அமைச்சர் கேஎன் நேரு கொடுத்த பதிலடி!
அமைச்சர் நேரு
அமைச்சர் கே.என்.நேரு இன்று 70வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் நிலையில் அவரது பிறந்தநாள் விழா கொண்டாட்டங்கள் திருச்சியில் களைக்கட்டியுள்ளன. கடந்தாண்டு கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னையில் மீட்பு பணிகளில் இருந்த அமைச்சர் நேரு, பிறந்தநாள் வாழ்த்துச் சொல்வதற்காக தன்னை யாரும் நேரில் சந்திக்க வர வேண்டாம் எனக் கூறியிருந்தார். இதனால் கடந்தாண்டு நேருவின் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தை தவிர்த்தனர்.
ஆர்கெஸ்ட்ரா கச்சேரி
ஆனால் இந்தாண்டு 70வது பிறந்தநாள் என்பதால் வெகு விமரிசையாக கொண்டாடி தீர்க்கத் திட்டமிட்ட அமைச்சர் நேரு ஆதரவாளர்கள், சர்க்கரை நோய் முகாம், அன்னதானம், இலவச கண் பரிசோதனை முகாம், ஆர்கெஸ்ட்ரா கச்சேரி என பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். கடந்த காலங்களில் அமைச்சர் நேருவால் பலன் அடைந்தவர்கள், இனி வரும் காலத்தில் பலன் அடைய வேண்டும் என காய் நகர்த்துபவர்கள் இதற்கான செலவுகளை கவனித்துக் கொள்கின்றனர்.
தில்லை நகர் இல்லம்
கட்சியினர், தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள், என பலதரப்பட்டோரும் வாழ்த்துச் சொல்வதற்காக காலையிலேயே திருச்சி தில்லை நகரில் உள்ள அமைச்சர் நேரு இல்லத்தில் குவிந்துவிட்டனர். எல்லோரையும் சந்தித்து வாழ்த்து பெற்றுக்கொண்ட அமைச்சர் நேரு, முக்கிய நிர்வாகிகளுடன் சென்று கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனிடையே ஐப்பசியில் பிறந்த நாயகனே என நேருவை புகழ்ந்தும் கார்த்திகையில் பிறந்த காவியமே என நேருவின் மகன் அருணை புகழ்ந்து ஆதரவாளர்கள் பதாகைகள் வைத்து கவனம் ஈர்த்துள்ளனர்.
முதல்வரிடம் வாழ்த்து
இன்று திருச்சியில் தொண்டர்கள் தன்னை சந்திக்க வருவார்கள் என்பதால் நேற்றே சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்றுக்கொண்டார் அமைச்சர் நேரு.