மீண்டும் பள்ளிக்கு போகலாம்.. அரசு பள்ளிக்கு பெயிண்ட் அடித்து, அசத்தலாக மாற்றிய முன்னாள் மாணவர்கள்
திருச்சி: கொரானா வைரஸ் பரவிடும் இக்காலத்திலும் தாங்கள் படித்த, அரசு பள்ளியை அழகுப்படுத்தி அசத்தியுள்ளனர் முன்னாள் மாணவர்கள்.
தாங்கள் ஏறி வந்த ஏணி படியை எட்டி உதைக்கும் இந்த காலத்திலும் நன்றி மறவாமல் தாங்கள் படித்த அரசுப் பள்ளியை சீரமைத்து அழகுபடுத்தும் முன்னாள் மாணவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அதை எடுத்துக்காட்டும் விதமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த சம்பவம் மெய்ப்பித்து உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் நைனார்பாளையத்தில் உள்ளது அரசு மேல்நிலைப்பள்ளி. இதன் சுற்றுச் சுவரில் விளம்பர நோட்டீஸ்கள் ஒட்டியும் பல்வேறு அமைப்பினர் வாசகங்கள் எழுதியும் அசுத்தம் செய்து இருந்தார்கள்.

இயற்கை காட்சிகள்
இந்நிலையில், இதில் படித்த முன்னாள் மாணவர்கள் பள்ளியின் உட்புறமும் வெளிப்புறமும் சீர்படுத்தும் பணியைத் தொடங்கினர். அதில் முக்கிய பணியாக வெளிப்புறச் சுவற்றை முழுவதும் வெள்ளை அடித்து அதில் வரலாற்று சிறப்புமிக்க தலைவர்கள் மற்றும் இயற்கை காட்சிகள் படத்தை ஓவியமாக வரையத் தொடங்கினர்.

ஓவியர்களுக்கும் உதவி
இது பொதுமக்களிடையேயும் மாணவர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. உடன் அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் இணைந்து நட்பின் சிறகுகள் என்ற அமைப்பை உருவாக்கி, பள்ளியின் உட்புறம் தேவையான கட்டமைப்பையும் வெளிப்புறத்தில் வண்ண ஓவியங்கள் வரையவும் முடிவெடுத்து கொரோனா பாதித்த இந்த நேரத்திலும், ஓவியர்களுக்கு உதவிடும் நோக்கிலும் பள்ளியை அழகுபடுத்தும் நோக்கிலும் சிறப்பாக செய்து வருகின்றனர்.

தேச பக்தி படங்கள்
இதில் முன்னாள் முதல்வர்கள், காமராஜர், கருணாநிதி மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகளான, மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் படங்களையும் வரைந்துள்ளனர்.

தாயின் கருவறை
இந்த வழியில் செல்லும் பொதுமக்களும் மாணவர்களும் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். இதேபோல் அரசு பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் ஒவ்வொருவரும் நினைத்தால் அரசுப்பள்ளி சிறப்படையும் என்றும் அவர்கள் கூறினார்கள். ஒவ்வொருவருக்கும் பள்ளிக் கூடம் என்பது தாயின் கருவறை போன்றது என்ற எண்ணம் வந்தால், இது சாத்தியப்படும்.












Click it and Unblock the Notifications