முரசொலி நிலத்தை தயவு செய்து திருப்பி கொடுங்க.. 5 கோடி வரை கொடுக்க ரெடி.. பொன்.ராதாகிருஷ்ணன்
திருச்சி: முரசொலி நிலத்தை தமிழக அரசிடம் திருப்பி கொடுத்தால் திமுகவிற்கு ரூ.5 கோடி இழப்பீடு வழங்க பாஜக தயார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
பெரம்பலூரில் நடந்த தமிழ்நாடு பட்டதாரிகள் கூட்டமைப்பு கூட்டத்தில் பங்கேற்றார் பொன்.ராதாகிருஷ்ணன். இதன்பிறகு நிருபர்களிடம் அவர், கூறியதாவது:
திமுக அறக்கட்டளைக்கு சொந்தமான முரசொலி அலுவலகம் அமைந்திருக்கும் இடம் பஞ்சமி நிலம் எனக் கூறப்படுகிறது. அதற்கான மூலப்பத்திரம் உள்ளது என திமுக கூறுகிறது. முரசொலி அலுவலக இடம் பஞ்சமி நிலமா, இல்லையா? என்பது குறித்து தமிழக அரசு தயவு செய்து தனது பதிலை தெரிவிக்க வேண்டும்.

தலித் சமுதாயத்தை சேர்ந்த மக்களின் உரிமைகள் காக்கப்படவேண்டும். அந்த நிலம் பஞ்சமி நிலமாக இருந்தால் அதனை உடனே அரசிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த நிலம் ரூ.5 கோடி மதிப்பு எனவும், அந்த நிலத்தை தமிழக அரசிடம் திருப்பி கொடுக்கும் பட்சத்தில் தி.மு.க.விற்கு ரூ.5 கோடி இழப்பு என்றால் அந்த பணத்தை நான் அல்லது பாஜக தர தயார். அந்த பஞ்சமி நிலத்திலிருந்து திமுக அறக்கட்டளை மாற்றப்பட வேண்டும்.
உள்ளாட்சி தேர்தலில் மாபெரும் வெற்றியை அடைய வேண்டும் என்பதற்காக பாஜகவை பலப்படுத்தி வருகிறோம். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோரிடமிருந்து விருப்ப மனு பெறும் பணிகள் ஆரம்பித்துள்ளன. தேர்தல் எப்போது வந்தாலும் அதை எதிர்கொள்ள பாஜக தயாராக உள்ளது.
உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லையெனில் கிராமப்புற மக்களின் தேவைகளை நிறைவேற்றவோ, அவர்களது பிரச்சினைகளை தீர்க்கவோ முடியாத நாதியற்ற நிலை ஏற்படும்.
தூய்மையான, நேர்மையான மக்கள் பிரதிநிதிகள் வரவேண்டும் என்னும் ஏக்கம் மக்களிடம் உள்ளது. அதை தர சக்தி படைத்த ஒரே கட்சி பாஜகதான். இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications