திருச்சியில் கன்னியாகுமரி ரயிலை கவிழ்க்க சதி? தண்டவாளத்தில் லாரி டயர் வைத்தது யார்? தனிப்படை அமைப்பு
திருச்சி: திருச்சியில் ரயில் தண்டவாளத்தின் குறுக்கே மர்ம நபர்கள் வைத்த டயர் மீது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. இதில் ரயிலின் 4 பெட்டிகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால், ரயில் 20 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தண்டவாளத்தில் லாரி டயர் வைத்த நபர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
திருச்சி லால்குடி அருகே மேலவாலாடி பகுதியில் நேற்று இரவு ரயில்வே தண்டவாளத்தில் பெரிய டயர் ஒன்றை மர்ம நபர்கள் வைத்துள்ளனர். சென்னையில் இருந்து கன்னியாகுமாரி நோக்கி சென்று கொண்டிருந்த கன்னியாகுமரி அதி விரைவு ரயில், தண்டவாளத்தில் வைக்கப்பட்டு இருந்த டயர் மீது மோதியது. ரயில் மோதியதில் தண்டவாளத்தில் இருந்த டயர் தூக்கி வீசப்பட்டது.
எனினும் ரயிலின் என்ஜினில் கீழ்பக்கம் ரயில்பெட்டிகளுக்கு செல்லும் சில மின்சார வயர்களும் டயர் மோதியத்தில் அறுந்தன. இதனால், ரயிலின் நான்கு பெட்டிகளுக்கு மின்சாரம் தடைபட்டது. நள்ளிரவில் திடீரென மின்சாரம் தடைபட்டதால் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்த பயணிகள் திடுக்கிட்டு எழுந்தனர். மின்சாரம் தடைபட்டதால் பயணிகள் கடும் புழுக்கத்தில் அவதிப்பட்டனர். இதனிடையே உடனடியாக ரயிலை நிறுத்திய அதிகாரிகள், அறுந்த மின்சார வயர்களை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 20 நிமிடங்களுக்கு பிறகு மின்சார வயர்கள் சரி செய்யப்பட்டது. இதையடுத்து 20 நிமிடங்கள் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது. இதனால் ரயில் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். ரயில் திடீரென நிறுத்தப்பட்டதற்கான காரணம் தெரியாமல் பயணிகள் பலரும் தங்களுக்குள் பரபரப்பாக பேசிக்கொண்டனர். ரயில் தண்டவாளத்தின் குறுக்கே டயர் வைக்கப்பட்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த ரயில்வே போலீசார், டயரை கைப்பற்றினர்.
தண்டவாளத்தில் டயர் வைத்த மர்ம நபர்கள் யார்? எதற்காக டயரை வைத்தனர்? ஏதேனும் விபத்தை ஏற்படுத்தும் திட்டத்துடன் டயரை வைத்தனரா? என்ற கோணத்தில் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே, ரயில் தண்டவாளத்தின் குறுக்கே டயர்கள் வைக்கப்பட்டதால் ரயில் தாமதம் ஆனதால் பயணிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களான வைகை எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ் என ரயில்கள் இந்த வழியாகத்தான் கடந்து செல்கின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ரயில்வே வழித்தடத்தில் தண்டவாளத்தின் குறுக்கே டயர் வைக்கப்பட்ட சம்பவம் பயணிகள் மத்தியிலும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தண்டவாளத்தில் டயர் வைக்கப்பட்டு இருக்கும் இந்த இடத்திற்கு அருகில் ரயில்வே சுரங்கப் பாதை அமைக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளையும் ரயில்வே மேற்கொண்டு வருகிறது. ஆனால், ரயில்வே சுரங்க பாதை அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். விவசாய நிலங்கள் அதிகம் உள்ள இடத்தி ல் சுரங்கப் பாதை அமைக்கும் பட்சத்தில் பல்வேறு வழிகளில் சிரமங்கள் ஏற்படும் என்ற அடிப்படையில் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில்திருச்சியில் ரயில் தண்டவாளத்தின் குறுக்கே மர்ம நபர்கள் வைத்த டயர் மீது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. இதில் ரயிலின் 4 பெட்டிகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால், ரயில் 20 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது., ரயில்வே தண்டவாளத்தின் குறுக்கே டயர் வைக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தால் வேறு சேதம் எதுவும் ஏற்படவில்லை. எனினும் வேண்டும் என்றே ரயிலை கவிழ்க்க சதி வேலை எதுவும் நடத்தப்பட்டதா என்றும், தண்டவாளத்தில் லாரி டயர் வைத்த நபர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்கவும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications