திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாம் கைதிகளிடம் என்ஐஏ அதிகாரிகள் இன்றும் விசாரணை!
திருச்சி : திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள அகதி முகாமில் அமலாக்கத்துறை அதிகாரிகள், 2-வது நாளாக இன்றும் சோதனை மேற்கொண்டனர்.
திருச்சி மத்திய சிறையில், போலி பாஸ்போர்ட் வழக்கு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் கைதுசெய்யப்பட்ட இலங்கை, இந்தோனேஷியா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர், வழக்கு முடிந்த பின்னரும் தங்களை சட்ட விரோதமாக அடைத்து வைத்துள்ளதாக அவர்கள் உண்ணாவிரதம், மரங்களில் ஏறி தற்கொலை மிரட்டல் உள்ளிட்ட தொடர் போராட்டங்கள் நடத்தி வந்தனர். மேலும் கையை பிளேடால் கிழித்து தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டனர்.

இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்த நிலையில், 14 இலங்கை தமிழர்களை முகாம் சிறையில் இருந்து மாவட்ட நிர்வாகம் அண்மையில் விடுவித்தது. ஆனால் அவர்கள் இந்தியாவிலேயே தங்கி இருந்து வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது. இதற்கிடையே தமிழகத்திலிருந்து போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை தமிழர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விட்டதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், தேசிய பாதுகாப்பு முகமையைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், சி.ஆர்.பி.எஃப் வீரர்களுடன் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் நேற்று சுமார் 13 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். கைதிகளிடமிருந்து செல்ஃபோன் மற்றும் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே, இன்று காலை சுமார் 9-மணி அளவில் சென்னையில் இருந்து வருகை தந்த அமலாக்க துறை அதிகாரி அஜய்கவுர் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர், பண பரிவர்த்தனை, நகைகள் மற்றும் வங்கி கணக்கு ஆகியவற்றை குறித்து விசாரணை மேற்கொண்டனர். கைதிகளிடம் நேற்று நடைபெற்ற விசாரணையின் தொடர் விசாரணை இது என காவல்துறை தரப்பினர் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications