திமுகவினர் வன்முறை.. காவல்துறை யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது? - முதல்வர் ஸ்டாலினை சீண்டும் ஓபிஎஸ்!
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு - எம்.பி திருச்சி சிவா ஆதரவாளர்கள் இடையே நடந்த மோதல் தொடர்பாக ஓபிஎஸ் அறிக்கை விடுத்துள்ளார்.
திருச்சி : ஆளும் கட்சியினரே வன்முறையில் ஈடுபடுவது என்பதும் வேலியே பயிரை மேய்வதற்குச் சமம். இதிலிருந்து தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை, மாறாக சட்ட விரோதிகளின் ஆட்சி தான் நடைபெறுகிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
திருச்சி காவல்நிலையத்தில் திமுகவினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆளும் தி.மு.கவைச் சேர்ந்தவர்களே திருச்சியில் உள்ள காவல் நிலையத்திற்குள் சென்று ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு வன்முறையில் ஈடுபடுவதும், இந்தத் தாக்குதலில் அங்குள்ள பெண் காவலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதையும் பார்க்கும்போது, 2007ஆம் ஆண்டு மதுரையில் பத்திரிகை அலுவலகத்தில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவமும், அதில் அப்பாவி பத்திரிகையாளர் உயிரிழந்ததும்தான் மக்களின் நினைவிற்கு வருகிறது.

நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை திறந்து வைத்தார். அவற்றில் ராஜா காலனி பகுதியில் அமைந்துள்ள டென்னிஸ் மைதானத்தை திறந்து வைத்ததும் ஒன்று. இந்த நிகழ்ச்சிக்கு தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி என். சிவா அழைக்கப்படவில்லை என்றும், அவரது பெயர் சுல்வெட்டில் இடம் பெறவில்லை என்றும் தெரிவித்து, மாநிலங்களவை உறுப்பினரின் ஆதரவாளர்களுக்கும், அமைச்சரின் ஆதரவாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வன்முறையில் முடிந்துள்ளது. இந்த வன்முறையில் தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் வீட்டில் இருந்த நாற்காலிகள், இருசக்கர வாகனம், கார் கண்ணாடி ஆகியவை சேதப்படுத்தப்பட்டு உள்ளன.
இதுகுறித்து திருச்சியில் உள்ள நீதிமன்ற காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, மாநிலங்களவை உறுப்பினரின் ஆதரவாளர்கள் மீது அமைச்சரின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், பதிலுக்கு மாநிலங்களவை உறுப்பினரின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், இந்தத் தாக்குதலில் பெண் காவலர் ஒருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமளையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வன்முறையில் காவல் நிலையத்தில் உள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், காவல் நிலையத்தை கலவர பூமியாக ஆளும் கட்சியினர் மாற்றியுள்ளனர். வன்முறையும், தி.மு.கவும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தது; தி.மு.க ஆட்சி என்றால் அங்கே சட்டம் ஒழுங்கு சீரழியும்; தி.மு.க ஆட்சி என்றால் பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு இருக்காது என்பதற்கெல்லாம் எடுத்துக்காட்டாக காவல் நிலையத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவம் விளங்குகிறது.
அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினரும் மோதிக் கொள்வது என்பதும், ஆளும் கட்சியினரே வன்முறையில் ஈடுபடுவது என்பதும் வேலியே பயிரை மேய்வதற்குச் சமம். இதிலிருந்து தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை, மாறாக சட்ட விரோதிகளின் ஆட்சி நடைபெறுகிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீரழித்துக் கொண்டிருக்கும் திமுக அரசிற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அளவுக்கு வன்முறை நடைபெற்றும், காவல்துறையை தன் வசம் வைத்திருக்கும் முதலமைச்சர் வாய் திறக்காமல் இருப்பதைப் பார்க்கும்போது அவரது கட்டுப்பாட்டில் எதுவும் இல்லையோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்திருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications