அம்மா தாய்மார்களே.. கொஞ்சம் 2 நிமிஷம் உட்காருங்க.. பாஜக கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் ரெக்வெஸ்ட்
திருச்சி: சிதம்பரம் பாஜக பொதுக்கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் பேசிக்கொண்டு இருக்கும் போதே, பெண்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். அப்போது அவர்களை இரண்டு நிமிடங்கள் உட்காருங்கள்.. முடித்துவிடுவேன் என்று நிர்மலா சீதாராமன் சிரித்தபடியே கூறினார்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ளது. தேர்தலுக்கு ஒரு வாரம் கூட இல்லாத நிலையில், அரசியல் கட்சிகளின் பிரசாரம் அனல் பறக்கிறது. அரசியல் கட்சி தலைவர்களும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்..

சிதம்பரத்தில் பொதுக்கூட்டம்: தமிழக தலைவர்கள் மட்டுமல்லாமல், தேசிய தலைவர்களும் தமிழகத்தில் முகாமிட்டு, ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது. இதில் நாம் தமிழர் கட்சி மட்டும் தனித்து போட்டியிடுகிறது. பிற கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
தேர்தலுக்கான இறுதி கட்ட பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட தேசிய தலைவர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், சிதம்பரம் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் காத்தியாயினியை ஆதரித்து நேற்று பாஜக பொதுக்கூட்டம் சிதம்பரம் காந்தி சிலை அருகில் நடைபெற்றது.
நிர்மலா சீதாராமன்: இந்தக் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஹெலிகாப்டர் தளத்திற்கு மதியம் 1.30 மணி அளவில் வருகை தந்தார்.
அங்கு அவரை சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். தொடர்ந்து அவருக்கு பிரசாதம் வழங்கினர். அதன்பிறகு அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு சிதம்பரம் காந்தி சிலை அருகில் அமைக்கப்பட்டு இருந்த பிரசார மேடைக்கு வந்தார். பின்னர் அங்கு சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் கார்த்தியாயினிக்கு தாமரை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பேசினார்.
புறப்பட்டு சென்ற மக்கள்: நிர்மலா சீதாராமன் அனல் பறக்க பேசிக்கொண்டு இருக்கும் போதே, கூட்டத்தில் இருந்து பெண்கள் சிலர் புறப்பட்டு சென்றனர். இதைக்கவனித்த நிர்மலா சீதாராமன், ஒரு 2 நிமிடங்கள் இருங்க..முடிச்சிடுறேன்.. என சிரித்தவாறே கூறினார். நிர்மலா சீதாராமன் வேலை வாய்ப்பு தொடர்பாக புள்ளி விவரங்களுடன் பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது அங்கிருந்த பெண்கள் கிளம்பி செல்வதை கவனித்த நிர்மலா சீதாராமன், அம்மா தாய்மார்களே... இரண்டு நிமிஷம் உட்காருங்க... முடிச்சிடுறேன்.. நீங்கள் வீட்டிற்கு போகனும் என்பது தெரிகிறது..என்று கூறினார். இதனால், கூட்டத்தில் லேசான சிரிப்பலை எழுந்தது.
திமுகவை விமர்சித்து பேச்சு: முன்னதாக நிர்மலா சீதாராமன் பேசும் போது, திமுகவை கடுமையாக சாடினார். நிர்மலா சீதாராமன் கூறியதாவது:- சிதம்பரத்தில் பெண் வெற்றி வேட்பாளருக்கு பிரசாரம் செய்வது எனக்கு கிடைத்த பாக்கியம். அவரை நீங்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டும். கை கூப்பி கேட்டுக்கொள்கிறேன். அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.
சிதம்பரத்திற்கும், தமிழ்நாட்டுக்கும் சரி பல திட்டங்களை கொண்டு வந்தவர் மோடி. ஏழைகளுக்கு அன்னம் பயக்கும், பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை கொண்டு வந்தார். தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக்கல்லூரிகள் திறந்து வைக்கப்பட்டது. அதில் ஒன்று அரியலூரில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஊழலை எதிர்த்து: இதற்கு முன்பு இருந்த எம்பிக்கள் செய்தார்களா, காங்கிரஸ், அவர்களுடன் தோழமையில் உள்ள திமுக, இதர கட்சிகள் இந்த தொகுதியை முன்னேற்ற எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. ஆட்சியின் இருந்த போதே திமுக, காங்கிரசின் தோழமைக்கட்சியாக 10 வருடம் ஆட்சியில் இருந்த போது தமிழ்நாட்டிற்கு நல்லது எதையும் செய்யவில்லை. ஆனால் அவர்கள் ஊழலுக்கு பெயர் போனவர்கள்.
ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி அலைகற்றை ஊழல், நிலக்கரி ஊழல், வங்கிக்கடன் வழங்கியதில் ஊழல் என 10 ஆண்டுகளை ஓட்டினார்கள். அந்த 10 ஆண்டு கால ஆட்சியால் பாரத நாடு நிலை குலைந்து போய்விட்டது. கீழிருந்து 5-வது நிலைக்கு சென்ற பாரதத்தை, பிரதமர் மோடி இந்த 10 ஆண்டுகளாக முயன்று சரி செய்தார். மக்கள் மீது வரியை சுமத்தாமல், நாட்டை முன்னேற்ற ஊழலை எதிர்த்து ஆளுமையாக இருந்து ஆட்சி செய்தார்.
கருப்பு பலூன்: தொழில்நுட்பம் மூலம் உலகத்திற்கே இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. உலக அளவில் 100 கம்பெனி இருந்தால் அதில் 50 கம்பெனிகள் பாரத நாட்டில் இருக்கிறது. பெங்களூரு, ஐதராபாத், டெல்லிக்கு போகிறது. ஏன் தமிழ்நாட்டுக்கு வரவில்லை. அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதை விட்டு விட்டு, கோ பேக் மோடி என்று, கருப்பு பலூன்களை பறக்க விட்டார்கள் திமுகவினர். இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications