கரண்ட் இல்லை, குடிநீர் இல்லை.. கொட்டும் மழையில் மணப்பாறையில் மக்கள் போராட்டம்
திருச்சி: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மணப்பாறை, மருங்காபுரி பகுதிகளிலும் மின்சாரம், குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்திலும், திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, மருங்காபுரி பகுதிகளிலும் மின்சாரம், குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் இன்று மணப்பாறை அருகே உள்ள மருங்காபுரி ஒன்றியம் தொட்டியப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட நவலூரணிப்பட்டி பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கஜா புயல் பாதிப்பால் அப்பகுதிக்கு இன்னும் குடிநீர், மின்சாரம் விநியோகம் செய்யப்படவில்லை. அதிகாரிகளும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காலை தொட்டியப்பட்டியில் மணப்பாறை-கோவில்பட்டி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் பகுதி பொதுமக்களும் குடிநீர் -மின்சாரம் விநியோகிக்க கோரி இன்று காலை கொட்டும் மழையிலும் காலிகுடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications