திருச்சி சிவா மருமகன் மீது 7 பிரிவுகளில் வழக்கு! அமைச்சர் மீது கைகாட்டும் கராத்தே முத்துக்குமார்!
திருச்சி: திமுக கொள்கை பரப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவாவின் மருமகன் கராத்தே முத்துக்குமார் மீது காவல்துறையினர் 7 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
தன் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்ததன் பின்னணியில் அமைச்சர் கே.என்.நேரு உள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்திருக்கிறார் திருச்சி சிவாவின் மருமகன் கராத்தே முத்துக்குமார்.

திருச்சி திமுகவை பொறுத்தவரை அமைச்சர் கே.என்.நேருவுக்கும், திருச்சி சிவா எம்.பி.க்கும் இடையே எப்போதுமே ஏழாம் பொருத்தம் தான். இன்று நேற்றல்ல கடந்த கால் நூற்றாண்டு காலமாகவே அவர்கள் இருவருக்கும் இடையே பனிப்போர் நீடித்து வருகிறது.
அந்தப் பனிப்போர் அவர்கள் இருவரது ஆதரவாளர்களால் இப்போது மேலும் முற்றி தெருவுக்கு வந்துவிட்டது. அண்மையில் திருச்சி சிவா எம்.பி. வீட்டில் அமைச்சர் கே.என்.நேரு ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய விவகாரம் ஓய்வதற்குள் கட்சித் தலைமைக்கு புதிய தலைவலி ஒன்று ஏற்பட்டுள்ளது.
திருச்சி சிவாவின் மகள் பெயரில் உள்ள ஆவின் கடையில் நிறுத்தப்பட்டிருந்த டூவிலரை அடையாளம் தெரியாத நபர் திருடிச்சென்றதாகவும் அந்த நபரை பொதுமக்களுடன் சேர்ந்து விரட்டிப்பிடித்த திருச்சி சிவாவின் மருமகன் கராத்தே முத்துக்குமார் நையப்புடைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் காயமடைந்த அந்த திருடனுக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே இந்த விவகாரத்தில் ஆளுங்கட்சியின் எம்.பி.யான திருச்சி சிவா மருமகன் மீது காவல்துறையினர் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் 7 வழக்குகள் பதிவு செய்திருப்பது தான் இங்கு கவனிக்கத்தக்கது.
இது குறித்து செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள திருச்சி சிவாவின் மருமகன் கராத்தே முத்துக்குமார், அமைச்சர் கே.என்.நேருவுக்கு தெரியாமல் போலீஸார் தன் மீது வழக்குப்பதிவு செய்ய வாய்ப்பேயில்லை என்றும், அமைச்சர் தரப்பிலிருந்து வந்த அழுத்தம் காரணமாகவே தன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications