பாஜகவை எதிர்த்தால் தேசத்துரோகிகளா?... பெருமையாக ஏற்கிறோம்... மு.க.ஸ்டாலின் சுளீர்
திருச்சி: பாஜகவை எதிர்ப்பவர்கள் தேசத்துரோகிகள் என்றால் பெருமையுடன் அதை ஏற்கிறோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாநகரின் பொன்மலை பகுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் முன்னெடுத்த, "தேசம் காப்போம் மாநாட்டில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.
நாட்டை காப்பாற்ற பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது.. 'தேசம் காப்போம்' மாநாட்டில் திருமாவளவன் ஆவேசம்
அப்போது அவர் பேசியதாவது; நாட்டில் மிகவும் சீப்பான ரப்பர் ஸ்டாம்ப் தேச துரோகி என்ற பட்டம் தான். இந்துத்துவ சக்திகளாலும், பாஜகவினராலும் இலவசமாக வழங்கப்படும் தேசத் துரோகி பட்டத்தை, ஏற்க எந்த தயக்கமும் இல்லை என்றார்.
தேசத்துக்கு ஆபத்து
மேலும், நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தல் சனாதனத்துக்கும், ஜனநாயகத்துக்குமான தேர்தல். தேசம் காப்போம் என்ற முழக்கம் ஏன் எழ வேண்டும்? பாகிஸ்தான், சீனாவால் இந்த தேசத்துக்கு ஆபத்து வரவில்லை. தேசத்தை ஆள்பவர்களால் தேசத்துக்கு ஆபத்து வந்துள்ளது. அதனால் தான் தேசம் காப்போம் என்ற தலைப்பை திருமாவளவன் தேர்ந்தெடுத்துள்ளார்.
சீப்பான ரப்பர் ஸ்டாம்ப்
பாஜவை எதிர்ப்பவர்கள் எல்லாம் தேச துரோகிகள் என்று முத்திரை குத்தப்படுகிறது. இந்த நாட்டில் மிகவும் சீப்பான ரப்பர் ஸ்டாம்ப் தேச துரோகி என்ற பட்டம் தான். பாஜவை எதிர்ப்பவர்கள் தேசத்துரோகி என்றால் அந்த பட்டத்தை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளோம்.
நீதிக்கும், மோடிக்கும் சம்பந்தம் இல்லை
நீதிக்கும் மோடிக்கும் சம்பந்தம் இல்லை என்பதை சுட்டிக்காட்ட அவர் கொண்டு வந்தது தான் பொருளாதார இட ஒதுக்கீடு. சமூக ரீதியான இட ஒதுக்கீட்டுக்குள் கொண்டு வந்து, சமூக நீதியின் தத்துவத்தை குழிதோண்டி புதைப்பதுதான் மோடியின் நீதி. மேலும், ரபேல் விவகாரத்தில் முறைகேடு நடைபெறவில்லை என்று ஆதார ஆவணங்களுடன் நிரூபிக்க பாஜக அரசு தயாரா? என்றும் கேள்வி எழுப்பினார்.
கொட்டமடிக்கின்றனர்
மாநாட்டில் திருமாவளவன் பேசியதாவது: இந்த மாநாடு திமுக தலைமையிலான கூட்டணியின் முதல் தேர்தல் பிரசார மாநாடு என்று கூறுவதில் பெருமிதம், மகிழ்ச்சியடைகிறேன். மோடியின் வரவால், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி அமைந்த அரசு, சனாதனிகள் கொட்டமடிக்கின்றனர். இஸ்லாமியர், தலித், பழங்குடியினர்களுக்கு பாதுகாப்பு இல்லை. மீண்டும் தப்பித்தவறி பாஜ ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினால் தேசத்தை காக்க முடியாது. சகோதரத்துவத்தை மறுப்பது சனாதனம். பெண்களை பொது இடங்களுக்கு போகக்கூடாது என தடுக்கிறது.
சனாதனத்தை வேரறுப்போம்
பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது. நாடாளுமன்ற தேர்தலில் தில்லு முல்லு செய்து வெற்றி பெற்றுவிடலாம் என பா.ஜ.க.வினர் நினைக்கின்றனர். ஆனால் ஒரு போதும் நடக்கவிடாமல் தடுப்போம். சனாதனத்தை வேரறுப்போம் என்றும் கூறினார்.
இதே போல், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சியில் உரையாற்றினர்.