நடுக்காட்டுப்பட்டியில் மழை சிறிது நேரத்தில் நின்றுவிடும்.. மீட்பு பணிகள் பாதிக்காது.. வெதர்மேன்
சென்னை: திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நடுக்காட்டுப்பட்டியில் பெய்து வரும் லேசான மழை இன்னும் சிறிது நேரத்தில் நின்றுவிடும். எனவே மீட்பு பணிகளில் தொய்வு ஏற்படாது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகில் நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ- கலாமேரி தம்பதியின் 2 வயது மகன் சுஜித் வில்சன். இவர் நேற்று முன் தினம் அவரது வீட்டில் உள்ள தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்.
இவர் அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துவிட்டார். இவரை மீட்க கடந்த 3 நாட்களாக தீயணைப்பு துறையினர், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ஊர் மக்கள், போலீஸார், தமிழக அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் என அனைவரும் போராடி வருகின்றனர்.
மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் லேசான மழை.. மீட்பு பணிகளில் சிக்கல்
வானம் மேகமூட்டம்
இங்கு நேற்று மழை பெய்ததால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. குழிக்குள் தண்ணீர் புகாமல் இருக்க தார்பாய் கொண்டு மூடப்பட்டது. இந்த நிலையில் இன்றும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு லேசான மழை பெய்து வருகிறது.
மழை
இதனால் மீட்பு பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் சிறிய அளவிலான மேகக் கூட்டங்கள் வானத்தில் பரவி காணப்படுகின்றன. இதனால் மழை பெய்து வருகிறது.
மேக கூட்டங்கள்
இன்னும் சில மணி நேரங்களில் இந்த மழை நின்றுவிடும். எனவே மீட்பு பணிகளில் பாதிப்பு ஏதும் ஏற்படாது என்று தெரிவித்துள்ளார். எனினும் திருச்சியின் வடமேற்கு பகுதியில் மேகக் கூட்டங்கள் திரண்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குழி தோண்ட திட்டம்
தற்போதைய நிலவரப்படி ரிக் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. கரூரில் இருந்து கொண்டு வரப்பட்ட பாறையை குடைந்து போர் போடும் இயந்திரம் மூலம் குழி தோண்ட திட்டமிடப்பட்டுள்ளது.