திருச்சியில் மாஸ்டர் பட வில்லன் பவானி பாணியில் ஸ்கெட்ச்.. திமுக கவுன்சிலர் வழக்கில் ட்விஸ்ட்
திருச்சி: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவர் கூத்தைப்பார் பேரூராட்சி 11-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருந்தார். இவர் திருவெறும்பூர் பகுதியில் அரசு டாஸ்மாக் அருகே பங்குதாரருடன் சேர்ந்து பார் நடத்தி வந்தார். திமுக கவுன்சிலர் ரஞ்சித்குமாருக்கு மாஸ்டர் பட வில்லன் பவானி பாணியில் ஸ்கெட்ச் போட்டிருக்கிறார் ரவுடி ஒருவர். இந்த விவகாரத்தில் சிறுவர்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பாரதிபுரத்தைச் சேர்ந்த 38 வயதாகும் ரஞ்சித்குமார் என்பவர் கூத்தைப்பார் பேரூராட்சி 11-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருந்தார். மேலும் இவர் திருவெறும்பூர் பகுதியில் அரசு டாஸ்மாக் அருகே பார்ட்னர்களுடன் சேர்ந்து பார் ஒன்றை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் கடந்த மார்ச் 30-ந்தேதி திருவெறும்பூர் அருகே உள்ள நவலப்பட்டு புதுத்தெருவுக்கும், சோழமாதேவிக்கும் இடையே தனது இருசக்கர வாகனத்தில் கவுன்சிலர் ரஞ்சித்குமார் வந்து கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனங்களில் வந்த ஒரு கும்பல் அவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது.
இந்த சம்பவம் தொடர்பாக நவலப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொலை செயலில் ஈடுபட்ட மர்மநபர்களை தீவிரமாக தேடி வந்தனர். தனிப்படை போலீசார் சந்தேகத்தின்பேரில் நவலப்பட்டுவைச் சேர்ந்த கென்னடி மகன் கிரி (20), காட்டூர் கணேஷ் நகரை சேர்ந்த மகேந்திரன் மகன் மதன் (25) மற்றும் 4 சிறுவர்கள் ஆகிய 6 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் 6 பேரும் சேர்ந்து ரஞ்சித்குமாரை கொலை செய்தது உறுதியானத. மேலும், அவர்களிடம் விசாரணை நடத்தியதில் பரபரப்பு தகவலாகி உள்ளது. துவாக்குடியைச் சேர்ந்த ரவுடி பாட்டில் மணி ரஞ்சித்குமாரிடம் மாமூல் கேட்டாராம். அதற்கு அவர் தர மறுத்ததாக தெரிகிறது.
இதனால் பாட்டில் மணி ரஞ்சித்குமாரை கொலை செய்ய ஒரு மாதத்துக்கு முன்பே திட்டமிட்டு நண்பர்கள் மூலம் அதை நிறைவேற்ற முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் சில வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக இருந்த அவரை போலீசார் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். இதனால் ரஞ்சித்குமாரை கொலை செய்யும் திட்டம் தள்ளிப்போனதாம்.
இதையடுத்து பாட்டில் மணி சிறையில் இருந்தபடி தனது கூட்டாளிகளான கிரி, மதன் மற்றும் 4 சிறுவர்கள் மூலம் கொலையை அரங்கேற்ற திட்டமிட்டாராம். அதன்படி இவர்கள் 6 பேரும் சேர்ந்து ரகசிய திட்டமிட்டு ரஞ்சித்குமார் எங்கெல்லாம் செல்கிறார் என கண்காணித்து கொலை திட்டத்தை அரங்கேற்றியது நாவல்பட்டு போலீசாரின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கில் கிரி, மதன் ஆகியோரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். சிறுவர்கள் 4 பேரையும் திருச்சியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications