கொம்பன் ஜெகன் என்கவுண்டர்.. காத்திரு போலீஸ் மிக விரைவில் வருவோம்.. திருச்சி எஸ்பி படத்துடன் மிரட்டல்
திருச்சி: திருச்சியில் கடந்த நவம்பர் 22ஆம் தேதி பிரபல ரவுடியும் ஏ ப்ளஸ் குற்றவாளியாக இருந்த கொம்பன் ஜெகன் போலீஸ் என்கவுண்டரில் கொலை செய்யப்பட்ட நிலையில், தற்போது திருச்சி எஸ்பியான வருண் குமாருக்கு மிரட்டல் எடுத்து வீடியோ வெளியாகி உள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பனைக்குறிச்சியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். கொம்பன் ஜெகன் என்ற பட்டப் பெயருடன் அப்பகுதியில் செல்வாக்கு மிகுந்த நபராக வலம் வந்தார்.

பள்ளி படிப்பை முடித்து பிஇ படிப்பதற்கு கல்லூரியில் சேர்ந்த அவர் நண்பர்களுக்கு இடையேயான பிரச்சனையில் அடிதடி ஆகி பின்பு குற்றப் பின்னணி கொண்ட நபராக மாறி இருக்கிறார். 2012ஆம் ஆண்டில் ஒரு கொள்ளை வழக்கு இவர் மீது முதன் முதலாக பதிவு செய்யப்பட்டது.
கொம்பன் ஜெகன்: அதனைத் தொடர்ந்து கொலை முயற்சி, கொள்ளை, கொலை மிரட்டல் என 2012 ஆம் ஆண்டிலிருந்து 2023 வருடங்களுக்குள் திருச்சி மதுரை கன்னியாகுமரி என பல்வேறு மாவட்டங்களில் சுமார் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டு ஏ ப்ளஸ் குற்றவாளியாக காவல் துறையினரால் அடையாளப்படுத்தப்பட்டார். மேலும் 2014, 2015 உள்ளிட்ட வருடங்களில் சக்திவேல் சசி ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கிலும் கல்லூரி மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கிலும் கைது செய்யப்பட்டார்.
காதல் திருமணம்: திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட அவர் அதற்கு பிறகு பூந்தமல்லி சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கு பிரபல ரவுடிகளுடன் பழக்கம் ஏற்பட்டு பின்னாளில் பெரிய அளவிலான நபராக மாறினார். தொடர்ந்து சிறையில் இருந்து வெளிவந்த அவர் ஆர்த்தி என்ற இளம் பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார். அதற்கு பிறகு எந்த குற்ற செயலிலும் ஈடுபட மாட்டேன் என காவல்துறையில் எழுதிக் கொடுத்துவிட்டு ஜெகன் சில காலம் எந்த சம்பவங்களிலும் ஈடுபடாமல் இருந்தார்.
என்கவுண்டர்: இந்த நிலையில் கடந்த நவம்பர் 22ஆம் தேதி போலீஸ் என்கவுண்டரில் ஜெகன் சுட்டுக் கொல்லப்பட்டார் . சனமங்கலம் காட்டுப்பகுதியில் துப்பாக்கிகளுடன் சிலர் வழிப்பறி செய்வதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்ததாகவும் அப்போது அங்கு சென்ற இன்ஸ்பெக்டர் கருணாகரன் சப் இன்ஸ்பெக்டர் வினோத் உள்ளிட்டோர் ஜெகனை பிடிக்க முயன்றபோது அறிவாளால் கொம்பன் ஜெகன் காவல்துறையினரை நோக்கி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
அதிர்வலைகள்: அதன் காரணமாக கருணாகரன் தனது துப்பாக்கியால் ஜெகனை சுட்டு தற்காப்புக்காக என்கவுண்டர் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு ஜெகனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விவகாரம் பெரிய அளவில் பிரச்சனை ஏற்படுத்திய நிலையில் கடந்த சில நாட்களாக அடங்கியிருந்தது. இந்த நிலையில் தற்போது திருச்சி எஸ்பிக்கே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருக்கும் சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது
இன்ஸ்டாகிராம் வீடியோ: கொம்பன் பிரதர்ஸ் என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் சிலர் கொம்பன் ஜெகன் தொடர்பான வீடியோக்களை அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து பதிவேற்றி வந்துள்ளனர். சில வீடியோக்கள் காவல்துறையினரை மிரட்டும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி ஒரு வீடியோவில் 'வெயிட்டிங் ஃபார் ரெட் அலர்ட்' என்றும் சம்பவங்கள் தொடரும் என திருச்சி எஸ் பி ஆன வருண்குமாரின் புகைப்படத்துடன் விரைவில் தலைகள் சிதறும் என்றும், மற்றொரு வீடியோவில் 'காத்திருடா போலீஸ் மிக விரைவில் வருவோம் டா' என்றும் பதிவிட்டு இருக்கின்றனர்
எஸ்பிக்கு மிரட்டல்: போலீஸ் என்கவுண்டரில் கொம்பன் ஜெகன் சுட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் போலீசாரை மிரட்டும் வகையில் இது போன்ற வீடியோக்கள் வெளியாகி இருப்பது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த வீடியோக்களை வெளியிட்டது யார் என்பது குறித்து சைபர் க்ரைம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அந்த இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டு இருக்கும் நிலையில் கொம்பன் ஜெகனின் ஆதரவாளர்களை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications