திருச்சி.. புதரில் கொரோனா நோயாளி சடலம் வீசப்பட்டதாக வீடியோ.. எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி விளக்கம்
திருச்சி.. புதரில் கொரோனா நோயாளி சடலம் வீசப்பட்டதாக வீடியோ.. எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி விளக்கம்
திருச்சி: திருச்சி அருகே எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் ஆம்புலன்சில் கொண்டு வரப்படும் சடலம் பொதுமக்கள் நடமாட்டமில்லாத பகுதியில் முள்புதரில் வீசிச் செல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சி இருங்களூர் அருகே கோட்டமேடு என்ற பகுதிக்கு, அந்த ஆம்புலன்ஸ் செல்வது போல உள்ளது அந்த காட்சி. ஆம்புலன்ஸிருந்து மூவர் கீழே இறங்கி சடலத்தை தூக்கிச் சென்று முட்புதர் கீழே வீசுவதை போலவும் அந்த காட்சி உள்ளது.
இருவர், சாதாரண உடையிலேயே இருந்தனர். மேலும், சடலத்தின் மீது கறுப்பு வண்ணத் துணியில் முழுவதுமாக மறைக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டது போல காட்சிகள் இருந்தன.

வைரல் காட்சிகள்
ஆனால், இறந்தவர் கொரோனா தொற்றால் உயிரிழந்ததால் தூக்கி வீசப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் இன்று காலை முதல் தகவல்கள் வைரலாக பரவியது. இந்த நிலையில், இந்த வீடியோ, குறிப்பிட்ட சில காட்சிகளை மட்டுமே வைத்து எடிட் செய்து வெளியாகியுள்ளதாக திருச்சி மாவட்ட சுகாதாரத்துறையினரும், மருத்துவமனை நிர்வாகத்தினரும் விளக்கம் அளித்துள்ளனர்.

கல்லூரி நிர்வாகம் விளக்கம்
வீடியோ விவகாரம் தொடர்பாக திருச்சி எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக, மருத்துவக் கல்லூரி டீன் என். பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியிருப்பதாவது: கடந்த 16ம் தேதி உயிரிழந்தவரின் சடலத்தை உறவினர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் உரிய தகவல் தெரிவித்து, பாதுகாப்பு முறைகளை பின்பற்றியே இருங்களூர் அருகேயுள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

ஆவணங்கள் உள்ளன
உயிரிழந்தவரின் சடலத்துக்கு எந்தவித மரியாதை குறைவும் அளிக்கவில்லை. அரசு அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் காட்சிகள் அனைத்தும் ஆவணத்துக்காக விடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. புகைப்படங்களும் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால், சமூக விரோதிகள் சிலர் திட்டமிட்டு விடியோவில் சில காட்சிகளை மட்டுமே பதிவு செய்து போலியாக சித்தரித்து அவதூறு ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர்.

நடவடிக்கை எடுக்கப்படும்
இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியருக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications