ஜெ மறைவுக்கு பிறகு 2 விஷயத்துக்கு அலை பாய்ந்தார் தம்பிதுரை.. தினகரன் திடுக் தகவல்!
திருச்சி: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தம்பிதுரைக்கு அதிமுகவின் பொதுச் செயலாளராக வேண்டும், முதல்வராக வேண்டும் என்ற ஆசை இருந்தது என அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
திருச்சி வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக அலுவலகம் திறப்பு விழா திருவானைக்காவலில் நடைபெற்றது. புதிய அலுவலகத்தை கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவை எந்தெந்த கட்சிகள் என்பதை இப்போது கூற மாட்டேன். பா.ஜ.க.வுடன் தி.மு.க. கூட்டணி சேர்ந்தால் காங்கிரசுடன் நாங்கள் சேருவோம் என்று கூற முடியாது.

திமுகவுக்கு பயம்
நான் ஏற்கனவே தேசிய கட்சிகளோடு கூட்டணி வைக்க மாட்டேன் என்று கூறி இருக்கிறேன். அதில் உறுதியாக இருக்கிறேன். தி.மு.க., மெகா கூட்டணி என எதை அமைத்தாலும் மக்களிடம் எடுபடாது. தி.மு.க. இப்போது உள்ள கூட்டணியை கூட மாற்றலாம். இதை அவர்கள் ஏற்கனவே செய்திருக்கிறார்கள். தி.மு.க. பயப்படுகிறது.

நாடாளுமன்றத் தேர்தல்
திருவாரூர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தவுடன் நாங்கள் களத்தில் உடனே குதித்து விட்டோம். ஆனால் மு.க. ஸ்டாலின் தேர்தலை ரத்து செய்தவுடன் போட்டி போட்டு வரவேற்று அறிக்கை விட்டார். நாடாளுமன்ற தேர்தலில் உறுதியாக நாங்கள்தான் வெற்றி பெறுவோம்.

மிகப் பெரிய வெற்றி
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது நான் உறுதியாக வெற்றி பெறுவேன் என்று கூறினேன். அதே போன்று மிகப்பெரிய வெற்றி பெற்றேன். இப்போதும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.ம.மு.க. மிகப்பெரிய வெற்றி பெறும்.

புதிய கட்சிகள்
கொடநாடு விவகாரத்தில் உண்மையை சி.பி.ஐ. கண்டுபிடிக்க வேண்டும். இதில் மர்மம் உள்ளது. இந்த விஷயத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்தால் டெபா சிட் கூட கிடைக்காது. தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதி மறைவிற்கு பிறகு அனைத்து கட்சிகளுமே புதிய கட்சிகள் போல் தான் உள்ளது.

மார்க்கெட்டிங்
நாடாளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அமைக்க மு.க.ஸ்டாலின் வெளி மாநிலம் சென்று உள்ளார். உள்ளூரில் விலை போகாததால் வெளி மாநிலத்தில் மார்க்கெட்டிங் செய்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி எப்படியாவது நாற்காலியை காப்பாற்றினால் போதும் என்ற நிலையில் உள்ளார்.

தூக்கி எறிவார்கள்
கொடநாடு விவகாரத்தில் அவர் பயப்படுவதற்கான காரணம் என்ன? இந்த ஆட்சி ஏஜெண்ட் ஆட்சி. பாரதிய ஜனதா கட்சியின் ஏஜெண்டாக செயல்படுகிறது. இதை மக்கள் தூக்கி எறிவார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

நிராசை
பின்னர் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, பா.ஜ.க.வை பற்றி விமர்சனம் செய்வது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு தினகரன் பதில் அளித்து கூறியதாவது:- ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தம்பிதுரைக்கு அதிமுகவின் பொதுச் செயலாளராக வேண்டும்.

மீண்டும் விரக்தி
முதல்வராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. முதலில் பன்னீர்செல்வத்தை முதல்- அமைச்சர் ஆக்கியதும் ஏமாற்றம் அடைந்தார். பிறகு சசிகலாவை பொதுச் செயலாளராக்கி எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் ஆக்கியதும் மீண்டும் ஏமாற்றம் அடைந்தார்.

இணக்கம்
எனவே இனியும் முதல்வர் ஆக முடியாத விரக்தியில் தம்பிதுரை உளறி வருகிறார். இதனால் பா.ஜ.க. மீது குற்றச்சாட்டுக்களை கூறி விமர்சித்து வருகிறார். தமிழகத்தில் அவர் ஒரு பேச்சு பேசுகிறார். பா.ஜனதாவை விமர்சிக்கிறார். ஆனால் டெல்லி சென்றால் அங்கே பா.ஜனதா அமைச்சர்களுடன், எம்.பி.க்களுடன் இணக்கமாக இருக்கிறார். இதன் மூலம் அவர் நாடகம் ஆடுகிறார் என்றார் தினகரன்.












Click it and Unblock the Notifications