ரஜினி, கமலை விடுங்க.. நம்ம எதிரியே வேற.. அவங்களை துரத்துவதுதான் எங்க லட்சியமே.. தினகரன் ஆவேசம்
முதல்வர், துணை முதல்வரை டிடிவி தினகரன் சரமாரி விமர்சித்துள்ளார்
திருச்சி: "ரஜினி, கமலை விடுங்க.. எதிரி ஓபிஎஸ், துரோகி எடப்பாடி பழனிசாமி, இவங்களை இந்த நாட்டை விட்டே துரத்துவது தான் எங்களின் லட்சியம்... எடப்பாடி எங்கிருந்தார், யாரால் முதல்வரானார் இது எல்லாமே மக்களுக்கும் தெரியும்.. 2021-ல் ரஜினி சொன்ன மாதிரி, திமுக, அதிமுக இல்லாத ஒரு ஆட்சிதான் அமைய போகிறது" என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ரஜினி, கமலின் அரசியல் இணைப்பு பேச்சு, தமிழக அரசியல் நிலவரம், உள்ளாட்சி தேர்தல் போன்றவை குறித்து செய்தியாளர்கள் தினகரனிடடம் கேள்வி எழுப்பினார்கள்.
அப்போது அவர் சொன்னதாவது: "அமமுக கட்சி ரிஜிஸ்டர் தாமதத்தால் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. ஒரு தேர்தலில் தோல்வியடைந்ததை வைத்து அக்கட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியாது. உள்ளாட்சி தேர்தலில் அமமுக உறுதியாக போட்டியிடும். கட்சி பதிவு கிடைத்தால் கட்சி சின்னத்திலும், இல்லையென்றால் சுயேட்சையாகவும் போட்டியிடுவோம்.

உள்ளாட்சி தேர்தல்
ஆளும் கட்சியானது உள்ளாட்சி தேர்தலை நடத்த தயாராக இல்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியே உள்ளாட்சி தேர்தலை நடத்த சிலர் முட்டுக்கட்டை போடுவதாக கூறுகிறார். உண்மையிலேயே தேர்தலை நடத்த விரும்பியிருந்தால் எப்போதோ நடத்தியிருக்கலாம்.

தலைமை செயலாளர்
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலின்போது ஒரு பக்கம் அதிமுகவினர் செயல் வீரர்கள் கூட்டம் நடத்தினர். இன்னொரு பக்கம் தலைமை செயலாளரை வைத்து தேர்தலை நிறுத்தி வைத்தனர். அதனால் உள்ளாட்சி தேர்தலை நடத்த அவர்களுக்கு ஈடுபாடு இல்லை.

துரத்த வேண்டும்
ரஜினி-கமல் அரசியலில் இணைந்து செயல்பட போவதாக சொல்லி உள்ளனர். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமென்றாலும் அரசியல் கட்சி தொடங்கலாம். ரஜினி, கமலை நாங்கள் சவாலாக ஏற்கவில்லை. எதிரி ஓ. பன்னீர்செல்வம், துரோகி எடப்பாடிபழனிசாமி ஆகிய இருவரையும் நாட்டைவிட்டு துரத்துவது தான் எங்களின் லட்சியம்" என்றார்.

நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் அடுத்த தேர்தலில் மாற்றம் வரும் என்று சொல்லியிருக்கிறாரே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, " நிச்சயமாக.. நண்பர் ரஜினிகாந்த் சொல்வதுபோல, அதிமுக, திமுக அல்லாத மக்கள் விரும்பும் புதிய ஆட்சி 2021-ல் மலரும். 2016, 17-ல் எடப்பாடி பழனிசாமி எங்கிருந்தார், யாரால் முதல்வரானார் என்று மக்களுக்கும் தெரியும்" என்று தினகரன் பதிலளித்தார். ரஜினியின் கருத்துக்கு தினகரன் ஆதரவு தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications