விஜய் பிரசாரத்தில் விதிமீறல்கள்.. அதிரடி காட்டிய திருச்சி காவல்துறை.. தவெக நிர்வாகிகள் 7 பேர் மீது வழக்கு
திருச்சி: திருச்சியில் விஜய் பரப்புரை மேற்கொண்ட நிலையில் நிபந்தனைகளை மீறியதாக திருச்சி மாவட்ட தவெக தலைவர் கரிகாலன் உள்பட 7 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தனியார், அரசு சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக தவெகவினர் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவர் விஜய் நேற்று திருச்சி, அரியலூர் உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் செய்தார். விஜய் பிரசாரம் செய்ய சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியது. தவெக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால், விஜயின் பிரசார வாகனம் நடந்து செல்லும் வேகத்தில் கூட போக முடியாத நிலை இருந்தது.

தடுப்புகளை தாண்டி செல்ல முயன்றதால்
இதனால், பல மணி நேரம் தாமதமாக ஒவ்வொரு இடத்திலும் பிரசாரம் நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஆனதால் பெரம்பலூர் சென்றடைய முடியாத நிலையில், விஜய் தனது பிரசாரத்தை ரத்து செய்து விட்டு சென்னைக்கு திரும்பினார்.
முன்னதாக விஜய் பிரசாரத்துக்காக திருச்சிக்கு வந்து இறங்கியதுமே பரபரப்பு தொற்றிக் கொண்டது. திருச்சி விமான நிலையத்தில் அவரை பார்ப்பதற்காக, வெளியே குவிந்திருந்த லட்சக்கணக்கான இளைஞர்களில் பலர் தடுப்புகளை தாண்டி செல்ல முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
7 பேர் மீது வழக்குப்பதிவு
திருச்சி மரக்கடை பகுதியில் விஜய் காலை 10.30 மணிக்கு மக்கள் மத்தியில் உரையாற்றுவார் என்று கூறப்பட்ட நிலையில் மதியம் 2.50 மணிக்குத்தான் அவர் பிரசார இடத்துக்கு வர முடிந்தது. மக்கள் கூட்டத்தில் அவரது வாகனம் நகர்ந்தே வரும் நிலை ஏற்பட்டது. 7 கி.மீ தூரத்தை கடந்துவர 5 மணி நேரம் ஆனது.
விஜயின் வாகனத்தை பின்தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் தவெகவினர் அணிவகுத்தனர். விஜயை பார்க்கும் ஆசையில், மரங்களிலும் மின் கம்பங்களிலும் கூட சிலர் ஏறியதை காண முடிந்தது. இந்த நிலையில், விஜய் பிரசாரத்தின் போது விதிமுறைகள் மீறப்பட்டதாக கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தவெக திருச்சி மாவட்ட செயலாளர் கரிகாலன் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடைகள் மீது ஏறி நின்று ஆரவாரம்
தனியார், அரசு சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக திருச்சி கண்டோன்மெண்ட், காந்தி மார்க்கெட், ஸ்ரீரங்கம் ஆகிய காவல் நிலையங்களில் மொத்தம் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் மற்றும் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. திருச்சி தென்னூர் பகுதியை சேர்ந்த ரவிசந்திரன் என்பவர் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ரவிச்சந்திரன் என்பவர் கொடுத்த புகார் மனுவில், "நான் மரக்கடை பகுதியில் கதவு, மேஜை, ஜன்னல், நாற்காலிகள் உள்ளிட்ட மரப்பொருட்கள் விற்பனை செய்து வருகிறேன். விஜய் மரக்கடை பகுதியில் பிரசாரம் செய்ய வருகை தந்தார். அப்போது அங்கு கூடி நின்ற தவெக தொண்டர்கள் எனது கடை மற்றும் அருகில் உள்ள 2 கடைகள் மீது ஏறி நின்று ஆரவாரம் செய்ததில், ரூ.1.20 லட்சம் மதிப்பிலான மரப்பொருட்கள் சேதமடைந்தன. பல மரப்பொருட்களை திருடிவிட்டு சென்றனர்" என கூறியுள்ளார்.
பூங்கா இரும்பு கம்பிகளை சேதப்படுத்தியதாக
இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சேதமடைந்த பொருட்கள் மற்றும் திருட்டு போன பொருட்களுக்கு உரிய இழப்பீடு தர வேண்டும் என்று புகார் மனுவில் கூறியிருந்தார். அதன்பேரில் காந்தி மார்க்கெட் போலீசார், தமிழக வெற்றிக்கழகத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல டிவிஎஸ் டோல்கேட் பாலத்தின் அடியில் இருந்த பூங்கா இரும்பு கம்பிகளை சேதப்படுத்தியதாக அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்தனர்.












Click it and Unblock the Notifications