அரிசி சாப்பிட்ட 6 ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு.. தூத்துக்குடி ஒட்டப்பிடாரத்தில் சோகம்!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே அளவுக்கு அதிகமாக அரிசி சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்துள்ளார். திடீரென உடல் சோர்வு ஏற்பட்டு மயங்கிய நிலையில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் மாணவி உயிரிழந்தார். அளவுக்கு அதிகமாக அரசி சாப்பிட்டு செரிமானம் ஆகாததால் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே எப்போதும் வென்றான் பகுதியில் உள்ள ஆதனூர் கிழக்கு தெருவினை சேர்ந்த கூலித் தொழிலாளி பாலகிருஷ்ணன் (வயது 40). இவரது மனைவி பேச்சியம்மாள். இந்த தம்பத்திக்கு 3 குழந்தைகள். இதில் 2வது மகள் மாளவிகா (வயது 11), அருகே உள்ள நாயக்கன்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

சிறுமி மாளவிகா நேற்று வழக்கம் போல், பள்ளிக்கு சென்றிருந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல் சோர்வு ஏற்பட்டது. சிறுமி மாளவிகாவுக்கு அரிசி சாப்பிடும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சோறு சமைப்பதற்காக வைத்திருக்கும் அரிசியினை சாப்பிடும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
அப்படித்தான் நேற்றும் மாளவிகா அரிசி சாப்பிட்டதாகவும், அதனால் தான் அவருக்கு பள்ளி வகுப்பறையில் வைத்து உடல் சோர்வு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனால் ஆசிரியர்கள் மாணவி மாளவிகாவை டேபிளில் படுக்க வைத்து ஓய்வு எடுக்க கூறினர். பின்னர் அதே பள்ளியில் படிக்கும் மாணவியின் அக்காவை அழைத்து இருவரையும் ஆட்டோவில் அமர வைத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
வீட்டுக்கு சென்ற சிறிது நேரத்தில் மாணவி மாளவிகா மயங்கி விழுந்துள்ளார். இதனால் பதறிப்போன பெற்றோர் மாணவியை எப்போதும் வென்றான் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் காண்பித்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தினர். இதற்காக 108 ஆம்புலன்ஸ்சுக்கு போன் செய்தனர். ஆனால் 108 ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனது.
இதனால் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு ஆட்டோவிலேயே மாணவியை குடும்பத்தினர் அழைத்து சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் மாணவி ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று கூறிவிட்டனர். அளவுக்கு அதிகமாக அரிசி சாப்பிட்டதன் காரணமாக, செரிமானம் ஆகாமல் மாணவி உயிரிழந்துவிட்டதாக கூறப்பட்டது. இதனால் மாணவியின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் கதறி அழுதனர்.
மேலும் 108 ஆம்புலன்ஸ் சரியான நேரத்தில் வந்திருந்தால் என் மகளை காப்பாற்றியிருக்கலாம் என்று கூறி பெற்றோரும், அவரது உறவினர்களும் கதறி அழுதனர். இதையடுத்து போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். தூத்துக்குடியில் அளவுக்கு அதிகமாக அரசி சாப்பிட்டதால் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications