பாட்டி கோரிக்கை.. கிராமத்துக்கு குடிநீர் வசதி செய்து கொடுத்த விஷால்.. நெகிழும் தூத்துக்குடி மக்கள்
தூத்துக்குடி: படப்பிடிப்புக்கு சென்ற இடத்தில் பாட்டி வைத்த கோரிக்கையை ஏற்று தூத்துக்குடி அருகே குமாரசக்கனாபுரம் கிராமத்துக்கு நடிகர் விஷால் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஷால் நடிப்பில் புதிய திரைப்படம் ஒன்று தயாராகி வருகிறது. விஷாலின் 34வது திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கி வருகிறார். ஏற்கனவே விஷால் - ஹரி கூட்டணியில் வெளிவந்த தாமிரபரணி, பூஜை ஆகிய திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில் தற்போது விஷால் 34 படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே விஷால் நடித்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அந்த கிராமத்தில் பொதுமக்கள் வைத்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி கொடுத்துள்ளார் நடிகர் விஷால்.
இது தொடர்பாக நடிகர் விஷால் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் தற்போது நடித்து வரும் 'விஷால்34' புதிய படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பின் இடைவெளியில் குமாரசக்கனாபுரம் ஊராட்சி பொதுமக்கள் நடிகர் விஷாலை சந்தித்து குடிநீர் வசதி இல்லாமல் மிகவும் கஷ்டபடுவதாகவும் தங்களுக்கு குடிநீர் வசதி செய்து தரும்படி கோரிக்கை வைத்தனர்.
அக்கோரிக்கையை உடனே நிறைவேற்றுவதாக பொதுமக்களிடம் வாக்குறுதியளித்த நடிகர் விஷால், குமாரசக்கனாபுரம் ஊராட்சி தலைவர் ராமகிருஷ்ணனை சந்தித்து கலந்தாய்வு செய்து ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அம்மக்கள் பயன்பெறும் வகையில் தனது தேவி அறக்கட்டளை சார்பில் ஆழ்துளை கிணறு (போர்) அமைத்து கொடுத்துள்ளார். மேலும் 2 சின்டெக்ஸ் டேங்க் அமைத்து குடிநீர் வசதிக்கு ஏற்பாடு செய்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
படப்பிடிப்பு வந்த விஷாலிடம் கேட்ட உடன் உதவிய விஷாலுக்கு அக்கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். அரசியல்வாதிகள் பலரிடம் கோரிக்கை வைத்தும் அவர்கள் செவிசாய்க்காத நிலையில் நடிகர் விஷால் செய்த உதவி தங்கள் கிராமத்திற்கு பேருதவியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர் கிராம மக்கள். பேரன் போல நினைத்து நான் கேட்டேன் அதை நிறைவேற்றியிருக்கிறார் விஷால் என்று பெருமை பொங்க கூறியிருக்கிறார் ஒரு பாட்டி.
கண்மாய் வற்றியதால் பல கிலோமீட்டர் நடந்து சென்று தண்ணீர் கொண்டு வருவோம். நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்துதான் தண்ணீர் பிடித்துக்கொண்டு வருவோம். தள்ளுவண்டியில் போய் தண்ணீர் பிடித்து தள்ளிக்கொண்டு வருவோம். தற்போது குழாய் அமைக்கப்பட்டதால் நாங்கள் தண்ணீர் பிடித்து வைத்து விட்டு வேலைக்கு செல்ல முடிகிறது என்றும் கிராம மக்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications