கனிமொழியை தோற்கடியுங்கள்.. தூத்துக்குடியில் அமித்ஷா ஆவேச பிரச்சாரம்
தூத்துக்குடி: திமுக வேட்பாளர் கனிமொழி ஊழல்வாதி. அவரை தோற்கடித்து தமிழிசையை வெற்றி பெறச் செய்யுங்கள் என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்தார்.
தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் பாஜக சார்பில் தமிழிசை சவுந்திரராஜன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக சார்பில் கனிமொழி போட்டியிடுகிறார்.
தமிழகத்தில் 5 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. அதில் தூத்துக்குடியில் போட்டியிடும் தமிழிசையை ஆதரித்து சங்கரப்பேரியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பேசினார். அப்போது அவர் பேசுகையில் பாரத ரத்னா எம்ஜிஆரை நினைத்து எனது உரையை தொடங்குகிறேன்.

அபிநந்தன்
புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த 40 சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு வீரவணக்கம். பாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய அபிநந்தனை நினைத்து இந்த கூட்டத்தில் உரையாற்றுகிறேன். அபிநந்தன் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

மோடி ஆட்சி
அடுத்த 5 ஆண்டுகளுக்கு மீண்டும் மோடி ஆட்சி அமைந்து அது ஏழைகளுக்கான ஆட்சியாகவே இருக்கும். பாஜக கூட்டணி தமிழகத்தில் 30 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என கருத்துக் கணிப்பு சொல்கிறது.

பிரதமராக மோடி வர விருப்பம்
அவ்வாறு வெற்றி பெற்று எதிர்கட்சிகளை காணாமல் போக செய்ய வேண்டும். காஷ்மீர் முதல் குமரி வரை பிரதமராக மோடியைத்தான் மக்கள் விரும்புகின்றனர். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மோடி பிரதமரானால் தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாஜக அரசு அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்யும் என உறுதியளிக்கிறேன்.

கனிமொழி ஊழல்வாதி
தென் மாநிலங்களை பாஜக கவனிக்காமல் இருந்தது இல்லை. கனிமொழி, கார்த்தி சிதம்பரம், ஆ ராசா ஆகியோர் ஊழல்வாதிகள். இவர்கள் 3 பேர் மீது ஊழல் வழக்குகள் உள்ளன. இவர்களை போல் பாஜகவினர் ஊழல்வாதிகள் அல்ல.

பேச்சுவார்த்தை கோரும் காங்கிரஸ்
பயங்கரவாதிகளை அழிக்க நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆனால் காங்கிரஸோ பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்கிறது. நம் நாட்டின் மீது வெடிகுண்டு வீசுபவர்களை பழிவாங்க வேண்டுமா இல்லையா

இரு அமைச்சர்கள்
காஷ்மீர் பிரச்சினையில் எந்தவித சமரசமும் இல்லை. தமிழகத்தைச் சேர்ந்த பொன் ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன் ஆகிய இருவரை அமைச்சர்களாக்கியது பாஜக. தமிழிசை சவுந்தரராஜனுக்கு உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை என்றார் அமித்ஷா.












Click it and Unblock the Notifications