வெறும் 28 வயது தான்.. தூத்துக்குடி அருகே நடுரோட்டில் சுருண்டு விழுந்த காவலர்.. கர்ப்பிணி மனைவி கதறல்
தூத்துக்குடி: தென்காசி மாவட்டம் குலசேகரக்கோட்டை பகுதியை சேர்ந்த பசுபதி மாரி என்ற ஆயுதப்படை காவலர், கமாண்டோ பயிற்சியில் ஈடுபட்ட போதே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.. இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டு நிறைமாத கர்ப்பிணியான அவரது மனைவி மருத்துவமனை வாசலில் கதறி அழுதது காண்போரை கலங்க வைத்தது..
தென்காசி மாவட்டம் குலசேகரக்கோட்டை பகுதியை சேர்ந்த பொன்ராஜ் என்பவருடைய மகன் பசுபதி மாரி (வயது 28). பசுபதி மாரி கடந்த 2017-ம் ஆண்டு தென்காசி மாவட்டத்தில் ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியில் சேர்ந்தார். தொடர்ந்து ஆயுதப்படை போலீஸ்காரராக பணிபுரிந்து வந்த பசுபதி மாரிக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்தது. இவரது மனைவி பெயர் மாரிச்செல்வி.. இவர்களுக்கு திருமணம் முடிந்து 2 வருடங்கள் ஆகிவிட்டது. தற்போது மாரிச்செல்வி 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

கடந்த ஆகஸ்ட 5-ந்தேதி தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் துப்பாக்கி சுடுதல் தளத்தில் கமாண்டோ பயிற்சி நடந்தது. அப்போது சக காவலர்களுடன் காவலர் பசுபதி மாரியும் வந்தார். அங்கு துப்பாக்கி சுடுதல் தளத்தில் கமாண்டோ பயிற்சியுடன் பல்வேறு பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து ஓட்டப்பயிற்சியிலும் காவலர் பசுமதி மாரி ஈடுபட்டார். அப்படி ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்ட போது, கீழவல்லநாடு குடிநீர் தொட்டி அருகே திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
இதை கண்டு அவருடன் ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த சக போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஆயுதப்படை காவலர் பசுமதி மாரியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பசுபதி மாரி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த காவலர் பசுபதி மாரியின் உடலை பார்த்து அவரது நிறைமாத கர்ப்பிணி மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதது காண்போரை கலங்க வைத்தது..
உடற்பயிற்சி செய்யும் போது, உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டு உயிரிழப்பது அண்மைக்காலங்களில் அதிகரித்துள்ளது. ஜிம்மில் அல்லது உடற்பயிற்சி கூடங்களில், கடுமையான உடற்பயிற்சி செய்யும் போது, உடலில் நீர் சத்து குறைந்து மயங்கி விழுவது, மாரடைப்பு ஏற்படுவது அடிக்கடி நடக்கிறது. மிக இளம் வயதில் உள்ளவர்கள் இதுபோன்ற பிரச்சனைகளால் உயிரிழப்பது அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications