திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வெளியே திடீர் குலவை.. அமைச்சர் ரோஜா.. அதிர்ந்த பிரஸ் மீட்
தூத்துக்குடி: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடனான சந்திப்பு எதற்கு என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு குலவையிட்டு கிண்டல் செய்த ஆந்திர அமைச்சர் ரோஜா கடைசி வரை அந்தக் கேள்விக்கு பதிலளிக்காமலே புறப்பட்டுச் சென்றார்.
ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் நடிகை ரோஜா, திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று வந்திருந்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், வரும் 2024 ஆந்திர சட்டசபைத் தேர்தலில் 175க்கு 175 தொகுதிகளையும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தான் கைப்பற்றும் என மிக உறுதியாக நம்பிக்கை தெரிவித்தார்.
ஆந்திராவில் மீண்டும் ஆட்சி அமைக்கப்போவது தங்கள் கட்சி தான் என்றும் தெலுங்கு தேசம் கட்சியால் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாது எனவும் கூறினார்.
அப்போது ரஜினிகாந்த் குறித்த விமர்சனம், நேற்று நடைபெற்ற டிடிவி தினகரனுடனான சந்திப்பு என்பன உட்பட இன்னும் பல்வேறு விவகாரங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்விகளை வீசினர்.

இதென்னடா வம்பா போச்சு என்கிற வகையில், ஆந்திராவில் இருந்த போது ரஜினி மீது அனல் கக்கிய ரோஜா, நேற்றைய தினம் தமிழகத்தில் ரஜினிகாந்த் பற்றி வாய் திறக்க தயங்கினார்.
சிரிப்பை மட்டுமே பதிலாக கொடுத்துவிட்டு நகர்ந்த ரோஜாவை செய்தியாளர்கள் விடுவதாக இல்லாமல், டிடிவி தினகரனை மதுரையில் திடீரென சந்தித்தது ஏன் வினவினர்.
அப்போது ''லுலலுலலுல'' என குலவையிட்டு கிண்டல் அடித்த ஆந்திர அமைச்சர் ரோஜா பிரஸ்மீட்டை முடித்துக் கொண்டு திருச்செந்தூர் முருகன் கோயிலிலிருந்து அவசர அவசரமாக புறப்பட்டுச் சென்றார்.












Click it and Unblock the Notifications