குலசேகரன்பட்டினத்தில் பக்தர்கள் இடையே பயங்கர மோதல்.. கடற்கரையில் நடந்த ஷாக் சம்பவம்.. வெளியான வீடியோ
தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் முத்தராம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ள நிலையில், கடற்கரையில் இரு குழுக்களாக வந்த பக்தர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. கையில் கிடைத்த பொருட்களை எடுத்து இரு குழுவினரும் அடித்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினத்தில் ஞானமூர்த்தீஸ்வரர் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. மைசூருக்கு அடுத்தபடியாக இந்த கோவிலில் தசரா திருவிழா கோலகலகமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா கடந்த 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தசரா திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவார்கள். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 10-ம் திருவிழாவான வருகிற 12 ஆம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு அன்று காலை 6 மணி, 7.30 மணி, 9 மணி, 10.30 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவர் கோவில் முன்பாக எழுந்தருளி லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் மகிஷா சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.
பல லட்சக்கணக்கான பக்தர்கள் தசரா திருவிழாவிற்கு வருவார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உடன்குடி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களிலும் தசரா திருவிழா களை கட்டும். குழுக்களாக சென்று நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். முத்தாரம்மன் கோவிலுக்கு சென்று திருக்காப்பு கட்டி பல்வேறு வேடமணிந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.
இந்த நிலையில் கடந்த 3 ஆம் தேதி கொடியேற்ற தினத்தன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குலசேகரன்பட்டினம் வருகை தந்திருந்தனர். அவர்கள் குலசேகரன்பட்டினம் கடற்கரை பகுதியில் மாலை அணிந்து, தனித்தனியாக கடற்கரையில் நீராடி கும்பம் எடுக்கும் நிகழ்ச்சியில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு குழுவினர்களுக்குள் இடையே
வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி, இரு குழுவினர்களும் கையில் கிடைத்த கம்புகளால் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர். இதனால் கடற்கரை பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ காட்சிகளின் அடிப்படையில் தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
கோவிலுக்கு பக்தர்கள் ஜாதி கொடி, சாதி அடையாளங்கள் கொண்ட ஆடைகளை அணிந்து வரக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளனர். ஆனாலும் பலரும் இதை பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் விழாவில் பலரும் ஜாதிக்கொடியுடன் வந்துள்ளனர். மேலும் சாதி படங்கள் கொண்ட டி சர்ட்டுகள் அணிந்துள்ளனர்.
தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்காரத்தன்று கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் சாதிக் கொடிகள் மற்றும் படங்கள் கொண்ட டீ சர்ட்டுகள் அணிந்து வர கடுமையான தடை விதிக்க வேண்டும் என்று பொதுமக்களும், பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். சாதிக் கொடிகள், டி சார்ட்கள் அணிந்து வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications